கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி 640 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
கிறிஸ்தவர்கள் இயேசுவின் பிறந்த நாளாக கொண்டாடப்படுவது தான் கிறிஸ்துமஸ் பண்டிகை. இது வரும் டிசம்பர் 25ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி கிறிஸ்தவர்கள் அதனை கொண்டாட தயாராகி வருகிறார்கள். புத்தாடை எடுப்பது, வீடு மற்றும் தேவாலயங்களில் வண்ண வண்ண விளக்குகள் கொண்டு அலங்காரம் செய்வது, ஸ்டார்களை கட்டி தொங்க விடுவது, இயேசுவின் பிறப்பினை குறிக்கும் வகையில் குடில்கள் அமைப்பது உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் வரும் சனி, ஞாயிறு வார விடுமுறை தினங்களோடு பண்டிகை விடுமுறையும் சேர்ந்து வருவதால் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வெளியூர் செல்லும் பயணிகள் வசதிக்காக 640 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
அதன்படி, சென்னையில் இருந்து தினசரி இயக்கப்படும் 2,100 பேருந்துகளோடு வரும் டிச.22ம்.,தேதி கூடுதலாக 350 பேருந்துகளும், டிச.23ம்.,தேதி 290 பேருந்துகளும் இயக்கப்படப்போவதாக கூறப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து திருநெல்வேலி, நாகர்கோவில், வேளாங்கண்ணி, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு பேருந்து சேவைகள் செயல்பாட்டில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதே போல் பண்டிகை முடிந்து மக்கள் தங்கள் ஊர்களில் இருந்து மீண்டும் சென்னைக்கு வருவதற்கு ஏதுவாகவும் போதுமான பேருந்துகள் இயக்க திட்டமிடப்படும் என்றும் கூறப்படுகிறது. மேலும், பண்டிகையை கொண்டாட மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்ளும் நிலையில், போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தடுக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக போக்குவரத்து காவல்துறை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.