பிரிக்ஸ் கூட்டமைப்பில் இணையும் 6 புதிய நாடுகள் - பிரதமர் மோடி அறிவிப்பு
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட 5 நாடுகளை சேர்ந்த பிரிக்ஸ் கூட்டமைப்பு கடந்த 2010ம் ஆண்டு அமைக்கப்பட்டதாகும். அதன்பின்னர் ஒவ்வொரு ஆண்டும் இந்த நாட்டின் தலைவர்கள் மாநாடு நடைபெறுவது வழக்கம். 2019ம் ஆண்டு கொரோனா தொற்று காரணத்தால் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு வந்த இம்மாநாடு இந்தாண்டு நேரடியாக நடைபெறுகிறது. அதன்படி கடந்த 2 தினங்களுக்கு முன்னர் தென்-ஆப்பரிக்காவில் இந்த மாநாடு துவங்கி நடந்து வருகிறது. இதில் இந்திய பிரதமர் மோடி கலந்துக்கொண்டுள்ளார். இந்த மாநாட்டில் உறுப்பு நாடுகளுக்கு இடையே நடக்கும் வர்த்தகம், பொது நாணயம் உள்ளிட்டவை குறித்த பேச்சுவார்த்தை நடந்தது என்று செய்திகள் வெளியாகியுள்ளது.
6 நாடுகள் வரும் ஜனவரி.1ம் தேதி 2024ம் ஆண்டு இணைக்கப்படவுள்ளது
மேலும் இந்த மாநாட்டில் பிரிக்ஸ் கூட்டமைப்பினை விரிவுபடுத்துவது தொடர்பான ஆலோசனை நடந்துள்ளது என்றும் தெரிகிறது. இதனிடையே, இந்த அமைப்பில் இணைய 23 நாடுகள் விண்ணப்பித்துள்ளது என்று கூறப்படுகிறது. அது குறித்தும் இந்த மாநாட்டில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, இந்த மாநாட்டின் முடிவில் 6 புதிய நாடுகள் 'பிரிக்ஸ்' கூட்டமைப்பில் இணைக்கப்படவுள்ளது என்றும், இதனடிப்படையில் பிரிக்ஸ் அமைப்பின் உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை 5ல் இருந்து 11ஆக உயரவுள்ளது என்றும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். அதேபோல் புதிதாக இந்த அமைப்பில் சவுதி அரேபியா, எகிப்து நாடுகள், அர்ஜென்டினா, இரான், எத்தியோப்பியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட 6 நாடுகள் வரும் ஜனவரி.1ம் தேதி 2024ம் ஆண்டு இணையவுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.