4 வயது சிறுமியை பலாத்காரம் செய்த சப் இன்ஸ்பெக்டர் - ராஜஸ்தானில் அதிர்ச்சி
ராஜஸ்தான்-தவுசா மாவட்டத்திற்கு உட்பட்ட ராகுவாஸ் காவல்நிலையத்தில் பூபேந்திரசிங் என்பவர் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். அதே ஸ்டேஷனில் கான்ஸ்டேபிளாக பணிபுரிபவர் வீடு காவல்நிலையத்திற்கு ஒட்டியபடி இருந்த நிலையில் பூபேந்திரசிங் வேலைநேரத்தில் சென்றுள்ளார். அப்போது அங்கு அருகிலுள்ள மற்றொரு கான்ஸ்டேபிளின் 4 வயது மகள் விளையாட வந்துள்ளார். அச்சிறுமியிடம் பூபேந்திர சிங் ஆசையாக பேசி அந்த வாடகை வீட்டில் உள்ள அறையில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அச்சிறுமி தனது தாயிடம் சென்று கூறி அழுதுள்ளார். அந்த சிறுமியின் தந்தை ஜெய்ப்பூர் காவல்நிலையத்தில் கான்ஸ்டேபிளாக தனது இரவுப்பணியினை முடித்து வீடு திரும்பிய பின்னர் இச்சம்பவம் குறித்து தெரிந்து அதிர்ச்சியடைந்துள்ளார். ராகுவாஸ் காவல்நிலையம் சென்று தங்கள் குழந்தைக்கு நேர்ந்த கொடுமை குறித்து கூறி புகாரளித்துள்ளனர்.
போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சப் இன்ஸ்பெக்டர்
ஆனால் அவர்களது புகாரினை காவல்துறை ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது. பின்னர் இதுகுறித்து அறிந்த அப்பகுதி மக்கள் ஒன்றாகக்கூடி காவல்நிலையம் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு காவல்துறைக்கு எதிரான கோஷங்களை எழுப்பியுள்ளனர். அதன்பின்னரே பூபேந்திரசிங் மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனிடையே சம்பவயிடத்திற்கு விரைந்த பாரதிய ஜனதா.,கட்சி எம்.பி.,கிரோடி லால் மீனா,'பாதிக்கப்பட்ட தலித் சிறுமிக்கு நீதி கிடைக்கவே வந்துள்ளேன்' என்றும், 'அசோக் கெலாட் அரசின் திறமையின்மை காரணமாக தேர்தல் போன்ற நேரங்களில் கூட காவல்துறையினர் இதுபோன்ற அட்டூழியங்களை செய்கிறார்கள்' என்று பேசியுள்ளார். அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் பேசுகையில், "குற்றம்சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர்மீது துறைரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும். பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும்"என்று உறுதியளித்துள்ளார்.