நாளொன்றுக்கு 20 வரதட்சணை மரணங்கள்: அதிர்ச்சியான ஒரு ரிப்போர்ட்!
5 ஆண்டுகளில் சுமார் 35,493 வரதட்சணை மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக ஒரு அதிர்ச்சியான தகவலை மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா வெளியிட்டுள்ளார். வரதட்சணைக் கொடுமைகளால் ஏற்படும் மரணங்கள் குறித்து நாடாளுமன்ற மக்களவையில் பேசிய மத்திய உள்துறை இணை அமைச்சர் வரதட்சணை கொடுமையால் நாடு முழுவதும் நடக்கும் மரணங்கள் பற்றிய தரவுகளை வெளியிட்டுள்ளார். நாட்டிலேயே உத்தரப்பிரதேச மாநிலத்தில் தான் வரதட்சணை மரணங்கள் மிக அதிகமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்தியாவில் நாளொன்றுக்கு 20 வரதட்சணை மரணங்கள் நிகழ்கிறது. உத்தரப்பிரதேசத்தில் மட்டும் ஒரு நாளுக்கு 6 மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
வரதட்சணை மரணங்கள் பற்றி வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்கள்:
2017 முதல் 2021ஆம் ஆண்டு வரையிலான 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் சுமார் 35,493 வரதட்சணை மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடத்திலும் ஏற்பட்ட வரதட்சணை மரணங்களின் எண்ணிக்கை: 2017ஆம் ஆண்டு- 7,466 2018ஆம் ஆண்டு-7,167 2019ஆம் ஆண்டு-7,141 2020ஆம் ஆண்டு-6,753 2021ஆம் ஆண்டு-6,753 இந்த 5 ஆண்டுகளில் உத்தரப்பிரதேசத்தில் மட்டும் 11,874 மரணங்கள் நிகழ்ந்துள்ளது. மேலும், பீகார் மாநிலத்தில் 5,354 மரணங்களும் மத்தியப்பிரதேச மாநிலத்தில் 2,859 மரணங்களும் பதிவாகி இருக்கிறது. அதிக வரதட்சணை மரணங்கள் ஏற்பட்ட மாநிலங்களின் பட்டியலில் இதற்கு அடுத்த இடத்தை மேற்கு வங்கமும்(2,389) ராஜஸ்தானும்(2,244) பிடித்துள்ளது. வரதட்சணை கொடுமைகளால் ஆயிர கணக்கான மரணங்கள் இன்னும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பது சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது.