கையில் ஒரு ரூபாய் கூட இல்லை! போயஸ் கார்டனில் வாழ்ந்த பிரபல நடிகருக்கு இந்த நிலையா? ஓடோடி வந்து உதவிய ரஜினிகாந்த்
செய்தி முன்னோட்டம்
தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு எனத் தென்னிந்திய மொழிகளில் 170-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற மூத்த நடிகர் மோகன் சர்மா, தற்போது போதிய பண வசதியின்றி முதியோர் இல்லத்தில் வாழ்ந்து வரும் செய்தி திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சச்சின் திரைப்படத்தில் ஜெனிலியாவின் தந்தையாகவும், சலங்கை ஒலி, ஏணிப்படிகள், நாடகமே உலகம் போன்ற பல வெற்றிப் படங்களிலும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள இவர், 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களைத் தயாரித்துள்ளார். மேலும் கடந்த 2002 ஆம் ஆண்டில் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.
ஜெயலலிதா உதவி
கடனில் மூழ்கிய திரைப்படம் & ஜெயலலிதாவின் உதவி
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டிற்கு அருகில் போயஸ் கார்டனில் வசித்து வந்ததாக நேர்காணல் ஒன்றில் மோகன் சர்மா தெரிவித்துள்ளார்.
தான் இயக்கிய நம்ம கிராமம் திரைப்படம் ஜெயலலிதாவுக்கு மிகவும் பிடிக்கும் என்றும், தனது சிறந்த 10 படங்களில் அதற்கு 5-வது இடத்தை அளித்துப் பாராட்டியதாகவும் கூறியிருந்தார்.
அப்படத்தை முடிப்பதற்காக வங்கிக் கடன்கள் வாங்கிப் பங்குகளை விற்க வேண்டிய சூழல் ஏற்பட்டதாகவும், அக்கடனை அடைப்பதாக உறுதியளித்த ஜெயலலிதா திடீரென மறைந்துவிட்டதால் தான் கடனில் மூழ்கியதாகவும் அவர் வேதனையுடன் பகிர்ந்துள்ளார்.
முதியோர் இல்லம்
மருத்துவ செலவுக்குக் கூடப் பணமின்றி முதியோர் இல்லத்தில் தஞ்சம்
உடல்நலக் குறைபாடு மற்றும் கால் அறுவை சிகிச்சைக்குப் பிறகு கையில் ஒரு ரூபாய் கூட இல்லாத நிலைக்குத் தள்ளப்பட்ட மோகன் சர்மா, வேறு வழியின்றி கும்மிடிபூண்டி அருகே உள்ள நந்தியம்பாக்கத்தில் இயங்கி வரும் முதியோர் இல்லத்தில் தஞ்சமடைந்துள்ளார்.
தனக்கு ஒரு மகன் இருப்பதாகவும், அவர் ஜெர்மனியில் தங்கி செட்டிலாக வேண்டும் என்பதற்காகத் தான் அவருடன் செல்லாமல் இங்குத் தங்கியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தற்போது மாத்திரை, மருந்துகள் வாங்கக் கூடக் கையில் பணமில்லாமல் அவதிப்பட்டு வருவதாக அவர் கண்ணீருடன் குறிப்பிட்டுள்ளார்.
ரஜினிகாந்த்
ரஜினிகாந்த் செய்த நிதியுதவி & பிலிம் சேம்பர் அதிருப்தி
கடுமையான பணநெருக்கடியில் தவித்த தகவலையறிந்து, நடிகர் ரஜினிகாந்த் தன்னைத் தொலைபேசியில் அழைத்து வங்கி விவரங்களைப் பெற்று உடனடி நிதியுதவியாக ₹1 லட்சம் வழங்கித் தெய்வமாக உதவினார் என்று மோகன் சர்மா தெரிவித்துள்ளார்.
தான் பிலிம் சேம்பர் தலைவராக இருந்தபோது வயதான காலத்தில் நோயால் பாதிக்கப்படும் கலைஞர்களுக்கு ₹5 லட்சம் வழங்கலாம் எனத் தீர்மானம் கொண்டு வந்ததாகவும், ஆனால் தற்போது அது திருத்தப்பட்டு இறந்த பின்னரே பணம் வழங்கப்படும் என நிர்வாகிகள் கூறுவதாகவும் மனவேதனையுடன் தெரிவித்துள்ளார்.
விஜய்
விஜய்யை சந்திக்க விண்ணப்பம்
தற்போது மீண்டும் பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்துள்ளதாகவும், ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு தேதிகள் கொடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தற்போதைய முதல்வரைத் தனக்கு 20 ஆண்டுகளுக்கும் மேலாக நன்றாகத் தெரியும் என்றும், அவரை சந்திப்பதற்காக விண்ணப்பித்துக் காத்திருப்பதாகவும் மோகன் சர்மா தெரிவித்துள்ளார்.
தனது நம்ம கிராமம் திரைப்படத்தின் சேட்டிலைட் உரிமையை யாராவது வாங்கினால், எஞ்சியுள்ள வாழ்நாளில் மருந்துச் செலவுகளுக்கு உதவியாக இருக்கும் என்பதே அவரது தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.