50 ஆண்டுகள், 300 படங்கள்: இந்திய சினிமாவின் உயரிய 'தாதாசாகேப் பால்கே' விருதை வென்றார் மூத்த நடிகர் அனந்த் நாக்
செய்தி முன்னோட்டம்
கன்னடம் மற்றும் இந்தித் திரையுலகில் ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக தனது ஒப்பற்ற நடிப்பால் தனக்கெனத் தனிமுத்திரையைப் பதித்த மூத்த நடிகர் அனந்த் நாக், 2024-ஆம் ஆண்டிற்கான மதிப்புமிக்க தாதாசாகேப் பால்கே விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்திய திரைப்படத்துறையின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக அளிக்கப்படும் மிக உயரிய அங்கீகாரமாக தாதாசாகேப் பால்கே விருது கருதப்படுகிறது. 78 வயதாகும் அனந்த் நாகிற்கு இவ்விருது வரும் செப்டம்பர் 22 அன்று குஜராத்தின் கெவாடியாவில் நடைபெறவுள்ள தேசியத் திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளது. இவருக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல முன்னணிப் பிரபலங்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
திரைப்பயணம்
ஐந்து தசாப்த காலத் திரைப்பயணம்
1948-ஆம் ஆண்டு செப்டம்பர் 4 அன்று பிறந்த அனந்த் நாக், நாடகத்துறையில் தனது கலைப்பயணத்தைத் தொடங்கினார்.
ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக நீடிக்கும் இவரது திரையுலக வாழ்க்கையில் கன்னடம், இந்தி, தெலுங்கு, தமிழ், மராத்தி, மலையாளம் மற்றும் ஆங்கிலம் எனப் பல மொழிகளில் 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
திரைப்படங்கள் மட்டுமன்றி சின்னத்திரையிலும் தடம் பதித்த இவர், ஆர்.கே.நாராயணனின் கதைகளை அடிப்படையாக கொண்டு ஒளிபரப்பப்பட்ட 'மால்குடி டேஸ்' தொடரில் நடித்ததன் மூலம் நாடு முழுவதும் புகழ்பெற்றார்.
நாட்டின் உயரிய விருதான பத்மபூஷண் விருதை பெற்றுள்ள அனந்த் நாக், ஐந்து முறை கர்நாடக மாநிலத் திரைப்பட விருதுகளையும் வென்று சாதனை படைத்துள்ளார்.