கங்குவா திரைப்படத்தின் படப்பிடிப்பில் விபத்து- மயிரிழையில் உயிர் தப்பிய சூர்யா
சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வரும் கங்குவா திரைப்படத்தின் படப்பிடிப்பில், ரோப் கேமரா அறிந்து விழுந்த விபத்தில், சூர்யா நூலிலையில் உயிர் தப்பியதாக கூறப்படுகிறது. பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாராகி வரும் சூர்யாவின் கங்குவா திரைப்படத்தின் படப்பிடிப்பு, சென்னைக்கு அடுத்துள்ள ஈவிபி ஃபிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று இரவு 11 மணிக்கு படப்பிடிப்பு நடந்து வந்த போது, ரோப் கேமரா அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ரோப் கேமரா சூர்யா தலை மீது விழுவதாக இருந்தது எனவும், சண்டை கலைஞர் சுப்ரீம் சுந்தர் எச்சரித்ததின் பேரில் சூர்யா நகர்ந்ததாகவும், அதனால் அவருக்கு பாதிப்பு இல்லை என கூறப்படுகிறது.
இருவேறு விதமாக பரவும் தகவல்கள்
நடிகர் சூர்யா மற்றும் பிற படக்குழுவினருக்கு ஏற்பட்டுள்ள காயங்கள் குறித்து, இரு வேறு விதமாக தகவல்கள் பரவி வருகிறது. சண்டைக் கலைஞர் சுப்ரீம் சுந்தர் எச்சரித்ததின் பெயரில் சூர்யா விலகியதால், கேமரா அவரது தலை மீது விழாமல், அவர் தோள் மீது விழுந்து அவருக்கு சிறிய காயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஈவிபி ஃபிலிம் சிட்டியில் இறுதி நாள் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில், விபத்து ஏற்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. விபத்து குறித்து, இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நசரத்பேட்டை போலீசார் சம்பவ இடத்தில் விசாரணையில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்தியன் 2 படப்பிடிப்பின் போதும், இங்கு கிரேன் விபத்துக்குள்ளாகி இருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.