'கும்கி 2' திரைப்படத்திற்குத் தடை நீக்கம்: ஒரு கோடி ரூபாயை நீதிமன்றத்தில் செலுத்த உத்தரவு
செய்தி முன்னோட்டம்
இயக்குனர் பிரபு சாலமன் இயக்கியுள்ள 'கும்கி 2' திரைப்படத்தை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்து வெள்ளிக்கிழமை (நவம்பர் 14) உத்தரவிட்டுள்ளது. நிதிப் பிரச்சனை காரணமாக விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கக் கோரி படத் தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. 2012 ஆம் ஆண்டு வெற்றி பெற்ற 'கும்கி' திரைப்படத்தின் தொடர்ச்சியாக, 13 ஆண்டுகளுக்குப் பிறகு 'கும்கி 2' உருவாக்கப்பட்டுள்ளது. அறிமுக நடிகர் மதி மற்றும் அர்ஜூன் தாஸ் ஆகியோர் நடித்துள்ள இப்படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார்.
கடன்
கடனை திருப்பி செலுத்தாததால் தடை விதிக்க மனு
வெள்ளிக்கிழமை வெளியாகவிருந்த இப்படத்தைத் தடை செய்யக் கோரி, சினிமா ஃபைனான்சியர் சந்திரபிரகாஷ் ஜெயின் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், பிரபு சாலமன் 2018 ஆம் ஆண்டுப் படம் தயாரிக்கத் தன்னிடம் ரூ.1.50 கோடி கடன் பெற்றதாகவும், வட்டியுடன் சேர்த்து ரூ. 2.50 கோடியைத் திருப்பித் தராததால் பட வெளியீட்டிற்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார். இதன் அடிப்படையில் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.
இடையீட்டு மனு
தயாரிப்பு நிறுவனம் இடையீட்டு மனு
இதையடுத்து, தயாரிப்பு நிறுவனமான பென் இந்தியா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இடையீட்டு மனுவில், "பிரபு சாலமன் இந்தப் படத்தின் இயக்குனர் மட்டுமே. அவர் வாங்கிய கடனுக்குத் தயாரிப்பு நிறுவனமான எங்களால் பொறுப்பேற்க முடியாது. தணிக்கைச் சான்று எங்கள் நிறுவனத்தின் பெயரில்தான் உள்ளது." என்று வாதிடப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இயக்குனர் பிரபு சாலமன் ஒரு கோடி ரூபாயை நீதிமன்றத்தில் செலுத்த உத்தரவிட்டு, 'கும்கி 2' திரைப்படத்தை வெளியிட அனுமதி வழங்கியுள்ளது.