Page Loader
போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணா கைது: வாட்ஸ்அப் மெஸேஜ்கள் மூலம் சிக்கிய ஆதாரம்
நடிகர் கிருஷ்ணா சிக்கியிருப்பது திரையுலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணா கைது: வாட்ஸ்அப் மெஸேஜ்கள் மூலம் சிக்கிய ஆதாரம்

எழுதியவர் Venkatalakshmi V
Jun 26, 2025
05:05 pm

செய்தி முன்னோட்டம்

போதைப்பொருள் பயன்பாட்டை மையமாகக் கொண்டு சென்னை காவல்துறையினர் நடத்தி வரும் விசாரணையில், நடிகர் கிருஷ்ணா சிக்கியிருப்பது திரையுலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வெளியாகும் தகவல்களின் அடிப்படையில், கிருஷ்ணாவின் கைதுக்கு வாட்ஸ்அப் உரையாடல்களே முக்கிய ஆதாரமாக இருப்பதாக கூறப்படுகிறது. அதிமுக ஐடி பிரிவு முன்னாள் நிர்வாகி பிரசாத் சமீபத்தில் ஒரு பார் தகராறில் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார், போதைப்பொருள் தொடர்பான தகவல்களை உறுதிப்படுத்தினர். இதில், பிரதீப் என்ற நபர் நடிகர் ஸ்ரீகாந்துக்கு போதைப்பொருள் வழங்கியதாக தகவல் வெளியானது. அதன் விளைவாக ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டு, தற்போது புழல் சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் தான் கிருஷ்ணா கைது செய்யப்பட்டுள்ளார்.

நடிகர் கிருஷ்ணா

நடிகர் கிருஷ்ணாவை தேடிய போலீசார்

விசாரணை விரிவாக்கப்பட்ட நிலையில், "கழுகு" படம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த நடிகர் கிருஷ்ணாவும் போலீசார் தேடும் பட்டியலில் இடம்பெற்றார். இயக்குநர் விஷ்ணு வர்தனின் சகோதரரான இவர், பல்வேறு தனிப்படை போலீசாரால் தேடப்பட்ட நிலையில் அவரே காவல்துறையினர் முன் ஆஜரானதாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில் தனக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை என கிருஷ்ணா மறுத்த நிலையில், சென்னையைச் சேர்ந்த போதைப்பொருள் விற்பனையாளர் கெவின் மற்றும் நடிகர் கிருஷ்ணாவுக்கு இடையே நடந்த வாட்ஸ்அப் உரையாடல்கள் ஆதாரமாக மாறியது. இதில் போதைப்பொருள் வாங்குதல், விநியோகம் தொடர்பான தகவல்கள் உள்ளனவென போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து கெவினும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

விசாரணை

மேலும் பலர் விசாரணை வளையத்தில் சிக்க வாய்ப்பு 

நடிகர் கிருஷ்ணாவை தொடர்ந்து இந்த விசாரணையில், இன்னும் சில சினிமா பிரபலங்களும் தொடர்புடையவர்களும் சிக்கப்போகும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இரண்டு முக்கிய நடிகைகளையும் போலீசார் விசாரித்து வருவதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் கிருஷ்ணாவின் நெருக்கமான நண்பர் ஒருவரும் கைது செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. நடிகர் கிருஷ்ணாவின் கைது தொடர்பாக, அவரது வழக்கறிஞர் காவல் நிலையத்தில் வாதிட்டுள்ளார். "கிருஷ்ணாவை 24 மணி நேரத்திற்கும் மேலாக காவல்துறையினர் காவல் நிலையத்தில் வைத்துள்ளனர், இது அவருடைய அடிப்படை உரிமையை மீறுகிறது" எனக் கூறி, சட்டரீதியான முறையில் சந்திக்க அனுமதி கோரியுள்ளார்.