விஜய்யின் 'ஜனநாயகன்' லீக் விவகாரத்தில் 6 பேரை கைது செய்த சைபர் கிரைம் போலீஸ்
செய்தி முன்னோட்டம்
நடிகர் விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படத்தின் காட்சிகள் இணையதளத்தில் கசிந்த விவகாரம் இந்தியத் திரையுலகையே உலுக்கியுள்ள நிலையில், இது தொடர்பாக தமிழக காவல்துறையின் சைபர் க்ரைம் பிரிவு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. சட்டவிரோதமாக படத்தின் காட்சிகள் கசிந்தது தொடர்பாக தயாரிப்பு நிறுவனம் அளித்த புகாரின் பேரில், ஞாயிற்றுக்கிழமை அன்று சைபர் க்ரைம் பிரிவு 6 பேரை கைது செய்தது. இது குறித்து படக்குழுவின் வழக்கறிஞர், "ஜனநாயகன் படத்தின் காட்சிகளைச் சட்டவிரோதமாகப் பரப்பிய 6 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். சமூக வலைதளங்கள் அல்லது டிஜிட்டல் தளங்கள் வாயிலாகப் படத்தின் காட்சிகளைப் பதிவிறக்கம் செய்பவர்கள் அல்லது பகிர்வர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கண்டறியப்பட்டு, அவர்கள் மீது உடனடி கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரித்துள்ளார்.
புகார்
முறையான புகார் மற்றும் 21 பேர் மீது சந்தேகம்
KVN புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு கட்டுப்பாட்டாளர் ஆர். உதயகுமார் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புகாரில், திருட்டுத்தனமாக படத்தை பரப்பும் வலையமைப்பில் தொடர்புடைய 21 நபர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. லீக் செய்யப்பட்ட வீடியோக்களை உடனடியாக நீக்கவும், இதற்கு காரணமானவர்களின் மொபைல் போன்கள், மடிக்கணினிகள் மற்றும் கிளவுட் ஸ்டோரேஜ் கணக்குகளை பறிமுதல் செய்யவும் காவல்துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆதரவு
திரையுலகத்தினர் திரண்ட ஆதரவு
பல நூறு கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள விஜய்யின் கடைசி திரைப்படம் இத்தகைய பாதிப்புக்கு உள்ளாகி இருப்பதற்கு ஒட்டுமொத்த இந்திய திரையுலகமும் கண்டனம் தெரிவித்துள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், சிரஞ்சீவி, சூர்யா மற்றும் விஜய் தேவரகொண்டா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் படக்குழுவினருக்கு தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர். திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே படத்தின் மதிப்பை குறைக்கும் இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.