நடிகைகள் பற்றி அவதூறாக பேசிய அதிமுக பிரமுகர் ஏ.வி. ராஜுவிற்கு திரைத்துறையினர் கண்டனம்
சில தினங்களுக்கு முன்பு அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜு, முன்னாள் முதலமைச்சரும், அதிமுகவின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக பிரபல நடிகை ஒருவரை குறிப்பிட்டு அவர் பேசிய ஒரு வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இது திரையுலகினர் இடையே கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. திரைத்துறையினர் பலரும் அவரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கூவத்தூரில் உள்ள விடுதி ஒன்றில் கடந்த 2017ம் ஆண்டு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்க வைக்கப்பட்டிருந்தது நினைவிருக்கலாம். அப்பொழுது அதிமுக எம்எல்ஏ ஒருவர் தனக்கு "அந்த ஒரு டாப் நடிகை தான் வேண்டும்" என்று கூறியதாக, அந்த நடிகையின் பெயரை குறிப்பிட்டு பேசியுள்ளார்.
ஏ.வி. ராஜுவின் பேட்டி
வலுக்கும் கண்டனக்குரல்
இளம் நடிகை தான் வேண்டும் என்று அந்த எம்எல்ஏ அடம்பிடித்ததாகவும், பின்னர் அக்கட்சியில் இருந்த ஒரு பிரபல நடிகர் தான் அந்த நடிகையை கூவத்தூர் அழைத்து வர முயற்சிகள் மேற்கொண்டதாகவும், இதற்காக அந்த நடிகைக்கு 25 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டது என்றும் ஏ.வி. ராஜு கூறியுள்ளார். இது குறித்து, இயக்குனரும், நடிகருமான சேரன்,"வன்மையாக கண்டிக்கிறேன், எந்த ஆதாரமும் இன்றி பொதுவெளியில் திரைத்துறையினர் பற்றி பெயர் சொல்லி அவதூறு கிளப்பிய இவர் மீது சட்டமும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நடிகர் சங்கம் இதற்கு தகுந்த பதில் நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன்", என்றுகூறி விஷால் மற்றும் கார்த்தியை அந்த பதிவில் டேக் செய்துள்ளார். அதேபோல, அதிமுகவில் இணைந்த காயத்ரி ரகுராமும் இதுகுறித்து கண்டித்துள்ளார்.