நடிகையும் அரசியல்வாதியுமான திவ்யா ஸ்பந்தனா இறந்துவிட்டாரா?
சமூக வலைத்தளங்கள், பல நல்ல விஷயங்களை பகிரவும், ஒருவரை ஒருவர் இணைக்கவும் பயன்படும். ஆனால், சில சந்தர்ப்பங்களில், அவதூறுகளையும், வதந்திகளையும் பரப்ப பயன்படுகிறது. வைரலாகவேண்டும் என்ற நோக்கத்தோடு சில விஷமிகள் அவ்வப்போது பிரபலங்களை குறி வைத்து வதந்திகளை பரப்புவதுண்டு. சில மாதங்களுக்கு முன்னர், 'சாமி' படத்தின் வில்லன் நடிகர், கோட்டா ஸ்ரீனிவாச ராவ் மரணமடைந்தார் என செய்தி பரவியது. உடனே அந்த ஊரின் காவல்துறையினர், அவர் வீடு இருந்த தெருவிற்கு தடுப்புகளை போட்டு, வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்து விட்டு விசாரித்த பின்னர் தான் தெரிந்தது இது வெறும் வதந்தி என. இந்த முறை, தவறான மரண வதந்திகளுக்கு இலக்கானவர், ரம்யா என்று பிரபலமாக அறியப்படும் நடிகையும், அரசியல்வாதியுமான திவ்யா ஸ்பந்தனா.
திவ்யா ஸ்பந்தனா பற்றி பொய்யான செய்திகள் பரவ ஆரம்பித்தது எப்படி?
ஜான்சன் PRO என அடையாளம் காணப்பட்ட ஒரு பயனர் X இல் ஸ்பந்தனா மாரடைப்பால் பரிதாபமாக இறந்துவிட்டார் என்று ஒரு செய்தியை வெளியிட்டது தான் இந்த வதந்திகளின் தொடக்கப்புள்ளி. இந்த தகவல் விரைவாக பரவ தொடங்க, சில தமிழ் ஊடகங்களும் இதை சரிபார்க்காமல் பரப்ப தொடங்கியது. "பெயரில் என்ன இருக்கிறது? நிறைய, வெளிப்படையாகத் தெரிகிறது" என்று புதன்கிழமை அதிகாலையில் ஸ்பந்தனா, பாரத்-இந்தியா பெயர் சர்ச்சை குறித்து ஒரு ட்வீட்டைப் பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பத்திரிகையாளர் சித்ரா சுப்ரமணியம், ஸ்பந்தனாவின் நலனை உறுதிப்படுத்தினார்
X இல் (முன்னாள் ட்விட்டர்) செய்தி வைரலான பிறகு, பத்திரிகையாளர் சித்ரா சுப்ரமணியம் சமூக ஊடகங்களில் நிலைமையை தெளிவுபடுத்தினார். "நான் ஸ்பந்தனாவிடம் பேசினேன். அவள் நலமாக இருக்கிறாள். நாளை பராகுவே சென்றுவிட்டு, பின்னர் பெங்களூர் வருகிறார்" என்று குறிப்பிட்டார். அவர் சரியான நேரத்தில் தெளிவுபடுத்தியதால், இந்த பொய்யான செய்தி மேலும் பரவுவதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. மேலும் ரம்யாவின் ரசிகர்கள் நிம்மதியடைந்தனர். அவரின் ட்வீட் இதோ:
பத்திரிகையாளர் தன்யா ராஜேந்திரன், பொய் செய்திகளை பரப்புபவர்களை கடுமையாக சாடியுள்ளார்
பத்திரிக்கையாளர் தன்யா ராஜேந்திரனும் எக்ஸ் தளத்திற்கு சென்று, போலியான செய்திகள் மற்றும் அவற்றை பரப்புவதற்கு காரணமானவர்களைக் கடுமையாக சாடினார். இது குறித்து அவர் ட்வீட் செய்துள்ளார். "ஸ்பந்தனாவிடம் பேசினேன். அவள் ஜெனீவாவில் இருக்கிறாள், அழைப்புகள் வரும் வரை நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தாள். பொறுப்பற்ற நபர் யாராக இருந்தாலும், இதை ட்வீட் செய்தவர் மற்றும் அதை செய்தியாக வெளியிட்ட செய்தி நிறுவனங்களும் வெட்கப்பட வேண்டும்."