
சென்னை நீலாங்கரையில் நடிகை அருணா வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
செய்தி முன்னோட்டம்
முன்னாள் பிரபல நடிகை அருணாவின் நீலாங்கரை வீட்டில் அமலாக்கத்துறை (Enforcement Directorate - ED) அதிகாரிகள் இன்று காலை சோதனை நடத்தினர். 6 பேர் கொண்ட அதிகாரிகள் குழு அருணா மற்றும் அவரது கணவர் மன்மோகன் குப்தாவிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றது. இயக்குநர் பாரதிராஜாவின் 'கல்லுக்குள் ஈரம்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அருணா, முதல் மரியாதை, ஆனந்த ராகம், சிவப்பு மல்லி, நீதி பிழைத்தது உள்ளிட்ட பல படங்களில் முன்னணி நடிகையாக நடித்தவர். சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கபாலீஸ்வரர் நகர், கேசினோ ட்ரை பகுதியில், வசிக்கும் அருணா மற்றும் அவரது கணவர் குப்தா, தற்போது விசாரணைக்குள்ளாகியுள்ளனர். குப்தா, இன்டீரியர் டெக்கரேஷன் பணிகளில் ஈடுபடும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
பண பரிமாற்றம்
சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்தது தான் சோதனைக்கான காரணம்
குப்தாவின் நிறுவனத்தில் சட்டவிரோத பண பரிமாற்றம் இடம்பெற்றதாக வந்த புகாரின் அடிப்படையில், அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சோதனையின் போது ஏதேனும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டால், இவர்களுக்கு சொந்தமான பிற வீடுகள் அல்லது அலுவலகங்களிலும் விரைவில் சோதனை நடைபெற வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தச் சோதனை, திரைத் துறையைச் சேர்ந்த பிரபலங்கள் தொடர்பான சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளில் தொடர்ச்சி என கருதப்படுகிறது.