தூத்துக்குடி மாவட்ட கிராம மக்களின் தண்ணீர் பஞ்சத்தினை தீர்த்தார் நடிகர் விஷால்
தமிழ் சினிமா உலகில் முன்னணி நாயகர்களுள் ஒருவரான நடிகர் விஷால் அண்மையில் நடித்து வெளியான திரைப்படம் 'மார்க் ஆண்டனி'. கடந்த சில வருடங்களாக தொடர்ந்து அவரது படம் தோல்வியினை கண்ட நிலையில், 'மார்க் ஆண்டனி' திரைப்படம் மிகப்பெரிய ஹிட் கொடுத்துள்ளது. விஷாலின் படங்களுள் ரூ.100 கோடி வசூல் பெற்ற முதல் திரைப்படம் என்னும் பெருமையினையும் இப்படம் பெற்றுள்ளது. இதனிடையே இந்த வெற்றியினை கொண்டாடிய விஷால், இப்படத்தின் ஒவ்வொரு டிக்கெட்டில் இருந்து ஒரு ரூபாய் விவசாயிகளுக்கு கொடுக்கப்படும் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது விஷால் தனது 34வது படத்தினை இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே இவர்களது கூட்டணியில் உருவான 'தாமிரபரணி', 'பூஜை' உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய ஹிட் அடித்தது.
தேவி அறக்கட்டளை மூலம் உதவி
இதனால் மீண்டும் இவர்களது கூட்டணியில் உருவாகி வரும் இப்படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதனிடையே இப்படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடி விளாத்திகுளம் அருகேயுள்ள குமாரசக்கனாபுரம் என்னும் கிராமத்தில் நடந்தது. அப்போது படப்பிடிப்பில் கலந்துக்கொள்ள விஷால் அங்கு சென்றிருந்த நிலையில், தங்களுக்கு குடிநீர் வசதி செய்து தரும்படி அக்கிராம மக்கள் முறையிட்டதாக கூறப்படுகிறது. அக்கோரிக்கையினை ஏற்ற விஷால், அக்கிராம ஊராட்சி மன்றத்தலைவரான ராமகிருஷ்ணன் என்பவரை அழைத்து பேசியுள்ளார். அப்போது தனது தேவி அறக்கட்டளை மூலம் உதவி செய்வதாக கூறியுள்ளார். அவர் உறுதியளித்ததன் படி, தற்போது அக்கிராமத்தில் போர் போட்டு, 2 சின்டெக்ஸ் டேங்க் வாங்கி கொடுக்கப்பட்டுள்ளது. தாங்கள் கேட்டவுடன் உடனடியாக தங்களது நெடுங்கால தண்ணீர் பஞ்சத்தினை போக்கிய விஷாலுக்கு அக்கிராம மக்கள் நன்றிகளை தெரிவித்து வருகிறார்கள்.