செக் மோசடி வழக்கில் இயக்குனர் லிங்குசாமிக்கு ஆறுதல்: சிறை தண்டனை நிறுத்தி வைப்பு
கோலிவுட்டின் பிரபல இயக்குனர் லிங்குசாமியின் தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் சார்பாக தரப்பட்ட செக், வங்கி கணக்கில் பணமில்லாமல் திரும்பிய விவகாரத்தில், இயக்குனர் லிங்குசாமி மீது மோசடி வழக்கு தொடரப்பட்டது. இந்த மோசடி வழக்கில் மேல்முறையீடு மனுவின் விசாரணையில், லிங்குசாமிக்கு விதிக்கப்பட்டிருந்த 6 மாதங்கள் சிறை தண்டனை உறுதி செய்தது முதன்மை அமர்வு நீதிமன்றம். இந்த வழக்கின் தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செல்லப்போவதாக லிங்குசாமி அறிவித்திருந்தார். தற்போது அந்த மனுவின் விசாரணையின் இறுதியில், லிங்குசாமிக்கு அவரது சகோதரருக்கும் விதிக்கப்பட்டிருந்த 6 மாத சிறை தண்டனையை நிறுத்தி வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதோடு, காசோலை தொகையில் 20%, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு
செக் மோசடி வழக்கின் பின்னணி என்ன?
லிங்குசாமி, திருப்பதி பிரதர்ஸ் என்னும் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வந்தார். பல வெற்றி படங்களை தயாரித்த இந்த நிறுவனம், அதன்பிறகு, சில தோல்வி படங்களை தந்து நஷ்டத்தில் இயங்கி வந்தது. இதற்காக, கடந்த 2014ஆம் ஆண்டு, பிவிபி கேப்பிட்டல்ஸிடம்,1.3 கோடி ரூபாய் கடனாக வாங்கினார் லிங்குசாமி. குறிப்பிட்ட நேரத்திற்குள் கடனை அடைக்காததால், பிவிபி நிறுவனம், லிங்குசாமியின் மீது வழக்கு தொடர்ந்தது. அதன்பின்னர், நீதிமன்ற உத்தரவின் பேரில், லிங்குசாமி, செக் கொடுத்துள்ளார். ஆனால், அந்த செக் பௌன்ஸ் ஆகி விட்டது. இதனால், லிங்குசாமி மீது செக் மோசடி என வழக்கு தொடர்ந்தது PVP கேபிட்டல்ஸ். அந்த விசாரணையின் இறுதியில் தான், இயக்குனர் லிங்குசாமிக்கு 6 மாதம் சிறை தண்டனை என தீர்ப்பு வழங்கப்பட்டது.