பெண்களுக்கு முன்னுதாரணமாக முருகப்பா குழுமத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்த வள்ளி அருணாச்சலம்
1900-களில் நிறுவப்பட்டு இன்று பல்வேறு துறைகளிலும் கால் பதித்து வளர்ந்து நிற்கும் சென்னையைத் தலைமையகமாகக் கொண்ட முருகப்பா குழுமத்தில், கடந்த 2020-ம் ஆண்டு ஒரு பிரச்சினை ஏற்பட்டது. உண்மையில் அது பிரச்சினையாகியிருக்க வேண்டிய விஷயம் அல்ல, மற்றவர்களுக்கு முன்னோடியாக இருக்க வேண்டிய வணிகக் குழுமம், பாலின வேறுபாடுகளைப் பார்ப்பதாக சர்ச்சையில் சிக்கியது. முருகப்பா குழுமத்தின் ஹோல்டிங் நிறுவனமான அம்பாடி இன்வெஸ்ட்மென்ட்ஸின் இயக்குநர் குழுவில் ஒருவராக இருந்தவர் எம்.வி.முருகப்பா. 2017-ல் அவர் காலமான பிறகு, அவரது இடத்தில் இயக்குநர் குழுவில் தங்களுடைய இடத்தைக் கேட்டிருக்கிறார் அவரது மகள் வள்ளி அருணாச்சலம். ஆனால், முருகப்பா குழுமத்தின் முக்கியப் பொறுப்புகளில் அக்குடும்பங்களைச் சேர்ந்த ஆண் வாரிசுகளே நியமிக்கப்பட்டிருக்கின்றனர். கடந்த 100 ஆண்டுகளாக இதுவே நடைமுறையில் இருந்து வந்திருக்கிறது.
ஆண் வாரிசு இல்லாத எம்.வி.முருகப்பா:
அக்குழுமத்தைச் சேர்ந்த இயக்குநர்கள் அனைவருக்கும் ஆண் வாரிசுகள் இருக்கவே, கேள்விகளே இன்றி பெண்கள் முக்கியப் பொறுப்புகளில் இருந்து புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்நிலையில், இயக்குநர் குழுவில் இடம் கேட்டு கொடுக்கப்படாத நிலையில், அக்குழுமத்தில் தங்களுடைய 8.15% பங்குகளை நியாயமான விலைக்கு வாங்கிக் கொள்ளவும் கேட்டிருக்கின்றனர். ஆனால், சந்தை விலையை விட குறைந்து விலைக்கு அவர்கள் வாங்கிக் கொள்ள முன் வந்ததாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, 2020-ம் ஆண்டு முருகப்பா குழுமத்தின் மீது, தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயத்தில் வழங்குத் தொடர்ந்திருக்கிறார் வள்ளி அருணாச்சலம். மூன்று ஆண்டுகளுக்கு மேலாக வழக்கு நடைபெற்று வரும் நிலையில், எம்.வி.முருகப்பா குடும்பத்தினர் மற்றும் முருகப்பா குழுமத்திற்கு இடையே பரஸ்பர முடிவு எட்டப்பட்டிருப்பதாகத் தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது.
வள்ளி அருணாச்சலத்திற்கு இயக்குநர் குழுவில் இடம் கிடைத்ததா?
இந்தப் பரஸ்பர முடிவில், இயக்குநர் குழுவில் வள்ளி அருணாச்சலத்திற்கான இடம் வழங்கப்படவில்லை. மாறாக, 8.15% பங்கை நியாயமான விலையில் அவர்கள் வாங்க முன்வந்திருப்பதாகக் கூறப்படுகிறது. வள்ளி அருணாச்சலம், அனுக்கருப் பொறியியலில் டாக்டர் பட்டம் பெற்றவர். மோட்டோரோலா, ஐபிஎம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் முக்கியப் பொறுப்புகளில் பணியாற்றிய அனுபவம் அவருக்கு இருக்கிறது. பெண் என்ற ஒரே காரணத்தாலேயே, அவருக்கு இயக்குநர் குழுவில் இடம் மறுக்கப்பட்டிருக்கிறது. மிக நீண்ட போராட்டத்திக்ருப் பின்பும், முடிவு வேறு விதமாக அமைந்திருப்பது வருத்தத்திற்குரிய ஒன்று. இதற்கு நேர்மாறாக, மற்றொரு இயக்குநர் ஒருவரின் உயிரிழப்பிற்குப் பின், ஆண் என்ற காரணத்தினாலேயே எவ்வித அனுபவமும் இல்லாத அவருடைய 23 வயது மகனுக்கு இயக்குநர் குழுவில் ஒரு இடத்தை முருகப்பா நிறுவனம் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.