லாக்கரில் நகை திருடு போனால் வங்கி பொறுப்பாகுமா? லாக்கர் வைத்திருப்போர் கவனிக்க வேண்டிய முக்கிய ஆர்பிஐ விதிகள்
செய்தி முன்னோட்டம்
இந்தியக் குடும்பங்கள் தங்கள் பரம்பரை நகைகளையும், முக்கிய ஆவணங்களையும் சேமிக்க வங்கி லாக்கர்களையே அதிகம் நம்புகின்றனர். ஆனால், சமீபகாலமாக டெல்லி, லக்னோ, பெங்களூரு போன்ற நகரங்களில் வங்கி லாக்கர்களில் இருந்து நகைகள் மாயமான புகார்கள் எழுந்துள்ளன. பெங்களூரில் ஒரு வங்கியின் உதவி மேலாளரே லாக்கர் நகைகளைத் திருடி ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய சம்பவங்கள், வங்கி லாக்கர்கள் உண்மையில் எவ்வளவு பாதுகாப்பானவை என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
புதிய விதிகள்
ரிசர்வ் வங்கியின் விதிகள்
வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, 2022 இல் ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) லாக்கர் விதிமுறைகளை மாற்றியமைத்தது. இதன் கீழ் சில முக்கிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. லாக்கரை இயக்கும் ஒவ்வொரு முறையும் வாடிக்கையாளருக்கு எஸ்எம்எஸ் மற்றும் மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பப்பட வேண்டும். லாக்கர் அறையின் சிசிடிவி காட்சிகள் குறைந்தபட்சம் 180 நாட்களுக்குப் பாதுகாக்கப்பட வேண்டும். அனைத்து லாக்கர் வாடிக்கையாளர்களும் புதிய விதிமுறைகளின்படி திருத்தப்பட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
நஷ்டஈடு
நஷ்டஈடு எவ்வளவு கிடைக்கும்?
வங்கி லாக்கரில் உள்ள பொருட்களுக்கு வங்கிகள் முழுமையான காப்பீட்டாளர்கள் கிடையாது. ஒருவேளை வங்கியின் கவனக்குறைவு, ஊழியர்களின் மோசடி, தீ விபத்து அல்லது திருட்டு காரணமாகப் பொருட்கள் காணாமல் போனால் அந்த லாக்கருக்கான ஆண்டு வாடகையைப் போல 100 மடங்கு மட்டுமே நஷ்டஈடாக வங்கி வழங்கும். உதாரணமாக, உங்கள் லாக்கர் வாடகை ரூ.3,000 என்றால், உங்களுக்கு அதிகபட்சமாக ரூ.3 லட்சம் மட்டுமே இழப்பீடாகக் கிடைக்கும். வெள்ளம், நிலநடுக்கம் போன்ற இயற்கைப் பேரிடர்களால் ஏற்படும் இழப்புகளுக்கு வங்கி பொறுப்பேற்காது.
செய்ய வேண்டியவை
வாடிக்கையாளர்கள் செய்ய வேண்டியவை
லாக்கர் பாதுகாப்பு என்பது வங்கி மற்றும் வாடிக்கையாளர் இருவருக்கும் இடையிலான பகிரப்பட்ட பொறுப்பாகும். இதில் வாடிக்கையாளர்கள் கவனிக்க வேண்டியவை முதலாவது லாக்கரில் ரொக்கப் பணம் அல்லது அபாயகரமான பொருட்களைச் சேமிக்கக் கூடாது. லாக்கர் சாவி மற்றும் ரகசியக் குறியீடுகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். நீண்ட காலம் லாக்கரைத் திறக்காமல் இருக்கக் கூடாது. அவ்வப்போது சென்று சோதிப்பது அவசியம். வீட்டில் நகைகளை வைப்பதை விட வங்கி லாக்கர்கள் பாதுகாப்பானவை என்றாலும், வாடிக்கையாளர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.