Page Loader
ரூ.240 கோடி மதிப்புள்ள பங்குகளை 4 மாத பேரனுக்கு பரிசாக வழங்கினார் இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி

ரூ.240 கோடி மதிப்புள்ள பங்குகளை 4 மாத பேரனுக்கு பரிசாக வழங்கினார் இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி

எழுதியவர் Sindhuja SM
Mar 18, 2024
05:54 pm

செய்தி முன்னோட்டம்

இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி, ரூ.240 கோடி மதிப்புள்ள தனது நிறுவனத்தின் பங்குகளை தனது நான்கு மாத பேரன் ஏகாக்ரா ரோஹன் மூர்த்திக்கு பரிசாக அளித்துள்ளார். இதனால், இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் நாராயண மூர்த்தியின் தனிப்பட்ட பங்குகள் 0.40% இல் இருந்து 0.36% ஆக குறைந்துள்ளது. இந்தியாவின் இரண்டாவது பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான இன்ஃபோசிஸில் தற்போது ஏகாக்ரா ரோஹன் மூர்த்திக்கு 0.04% பங்குகள் உள்ளன. இதனையடுத்து, நாராயண மூர்த்தியின் பேரனான ஏகாக்ரா இந்தியாவின் இளைய கோடீஸ்வரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். நவம்பர் 2023இல், நாராயண மூர்த்தியின் மகன் ரோஹன் மூர்த்தி மற்றும் அவரது மனைவி அபர்ணா கிருஷ்ணன் ஆகியோர் தங்களுக்கு மகன் பிறந்திருப்பதாக அறிவித்தனர்.

இன்ஃபோசிஸ் 

நாராயண மூர்த்தியின் பேரன் பேத்திகள் 

ஏகாக்ரா என்ற பெயர் சமஸ்கிருதத்தில் இருந்து உருவானதாகும். அசைக்க முடியாத கவனம் மற்றும் உறுதியை இந்த பெயர் குறிக்கிறது. ஏகாக்ரா, நாராயண மூர்த்தியின் மூன்றாவது பேரக்குழந்தை ஆவார். நாராயண மூர்த்தியின் மகள் அக்ஷதா மூர்த்தி மூலம் அவருக்கு ஏற்கனவே இரண்டு பேத்திகளும் உள்ளனர். இதற்கிடையில், நாராயண மூர்த்தியின் மனைவியும், ஏகாக்ராவின் பாட்டியுமான சுதா மூர்த்தி சமீபத்தில் ராஜ்யசபா உறுப்பினராகப் பதவியேற்றார். சமூகப் பணி, பரோபகாரம் மற்றும் கல்வி ஆகியவற்றில் அவர் ஆற்றிய பங்களிப்புகளுக்கான அங்கீகாரமாக சர்வதேச மகளிர் தினத்தன்று சுதா மூர்த்தியின் நியமனத்தை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். 25 ஆண்டுகளுக்கும் மேலாக இன்ஃபோசிஸ் அறக்கட்டளையை வழிநடத்திய சுதா மூர்த்தி, 2021 டிசம்பரில் ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.