
ஆறு நாட்கள் வளர்ச்சிக்குப் பிறகு 600 புள்ளிகளுக்கு மேல் சரிந்த சென்செக்ஸ்; காரணம் என்ன?
செய்தி முன்னோட்டம்
இந்திய பங்குச்சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகியவை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 22) உள்வர்த்தகத்தில் கடும் சரிவை சந்தித்தன. கடந்த ஆறு நாட்களில் கண்ட தொடர்ச்சியான ஏற்றத்திற்குப் பிறகு முதலீட்டாளர்கள் லாபப் பதிவு நடவடிக்கைகளில் ஈடுபட்டது இதற்கு ஒரு முக்கிய காரணமாகும். சென்செக்ஸ் 600 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 81,393 என்ற ஒரு நாள் குறைந்தபட்ச அளவை எட்டியது. அதேசமயம் நிஃப்டி 50 குறியீடு 24,893 ஆக சரிந்தது. லைவ் மின்ட் அறிக்கையின்படி, சந்தையின் இந்த சரிவுக்கு பல காரணிகள் இருப்பதாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். முதலாவதாக, தொடர்ச்சியான ஆறு நாட்கள் ஏற்றத்திற்குப் பிறகு லாபப் பதிவுகள் அதிகமாக இருந்தது. இந்த காலத்தில் சென்செக்ஸ் சுமார் 1,800 புள்ளிகள் உயர்ந்திருந்தது.
வரி விதிப்பு
வரி விதிப்பு கவலை
இரண்டாவதாக, ஆகஸ்ட் 27-ஆம் தேதி முதல் இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள 50% வரிவிதிப்பு குறித்த கவலைகள் பங்குச்சந்தையில் நிலவுகின்றன. இதனால் சுமார் $50 பில்லியன் மதிப்பிலான இந்திய ஏற்றுமதிகள் பாதிக்கப்படலாம். இந்த வரிவிதிப்பு குறித்து அமெரிக்கா சாதகமான முடிவுகளை இதுவரை அறிவிக்கவில்லை. மூன்றாவதாக, அமெரிக்க மத்திய வங்கியின் தலைவர் ஜெரோம் பவல் ஜாக்சன் ஹோலில் நிகழ்த்த உள்ள உரைக்கு முன்னதாக முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட்டனர். நான்காவதாக, நடப்பு காலாண்டில் வங்கி மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற முக்கிய துறைகளின் பலவீனமான வருவாய், முதலீட்டாளர்களின் நம்பிக்கையை குறைத்துள்ளது. இறுதியாக, ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே மீண்டும் அதிகரித்து வரும் பதட்டங்கள் கச்சா எண்ணெய் விலையை உயர்த்தி, இந்தியாவிற்கு பொருளாதார ரீதியாக எதிர்மறையாக அமைந்துள்ளது.