இன்னும் ரீஃபண்ட் பணம் வரவில்லையா? வருமான வரித் துறை ரீஃபண்ட் தாமதத்திற்கு முக்கிய காரணங்கள்
செய்தி முன்னோட்டம்
மதிப்பீட்டு ஆண்டு 2026-27க்கான வருமான வரி அறிக்கையைத் தாக்கல் செய்த லட்சக்கணக்கான வரி செலுத்துவோர் தங்களது ரீஃபண்ட் பணத்திற்காகக் காத்திருக்கின்றனர். வருமான வரித்துறை பெரும்பாலான அறிக்கைகளை விரைவாக செயலாக்கி வரும் போதிலும், சிலருக்கு ரீஃபண்ட் தொகை இன்னும் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை. சரிபார்ப்புப் பிரச்சனைகள், தவறான தகவல்கள் மற்றும் வரிப் பதிவுகளில் உள்ள முரண்பாடுகள் காரணமாகவே இத்தகைய தாமதங்கள் ஏற்படுவதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
தவறுகள்
இ-சரிபார்ப்பு நிலுவை மற்றும் வங்கி கணக்குத் தவறுகள்
வருமான வரி அறிக்கையைத் தாக்கல் செய்தவுடன் இ-சரிபார்ப்பை முடிக்கத் தவறினால் அந்த அறிக்கை முழுமையாகத் தாக்கல் செய்யப்பட்டதாகக் கருதப்படாது.
இதனால் ரீஃபண்ட் செயல்முறைகள் நிறுத்தப்படும்.
அதேபோல், ஐடிஆர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள வங்கியின் கணக்கு எண், ஐஎஃப்எஸ்சி குறியீடு அல்லது வங்கியின் முன்-சரிபார்ப்பு சரியாக இல்லையெனில், வங்கிக் கணக்கிற்குப் பணம் அனுப்பப்படாமல் தாமதமாகும்.
எனவே, வருமான வரி போர்ட்டலில் வங்கி கணக்கு முன்-சரிபார்க்கப்பட்டுள்ளதை உறுதிசெய்வது அவசியமாகும்.
ஆய்வு
AIS, படிவம் 26AS முரண்பாடுகள் மற்றும் கூடுதல் ஆய்வு
வரி செலுத்துவோர் அளிக்கும் வருமான விவரங்கள், அவர்களின் வருடாந்திரத் தகவல் அறிக்கை (AIS), படிவம் 26AS மற்றும் டிடிஎஸ் (TDS) சான்றிதழ்களுடன் துல்லியமாகப் பொருந்த வேண்டும்.
இவற்றில் சிறிய மாறுபாடுகள் இருந்தாலும் வருமான வரித் துறையின் கூடுதல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுத் தாமதம் ஏற்படும்.
மேலும், பான்-ஆதார் இணைப்புப் பிரச்சனைகள், அதிக அளவிலான ரீஃபண்ட் கோரிக்கைகள், முந்தைய ஆண்டுகளின் நிலுவையில் உள்ள வரிப் பாக்கிகள் மற்றும் மத்திய செயலாக்க மையத்தின் அதிகப்படியான பணிச்சுமை போன்றவையும் தாமதத்திற்குப் பிரதான காரணங்களாகும்.
ஆன்லைன் சரிபார்ப்பு
ரீஃபண்ட் நிலையை ஆன்லைனில் சரிபார்ப்பது எப்படி?
வருமான வரித் துறையின் அதிகாரப்பூர்வ e-Filing போர்ட்டலுக்குச் சென்று லாக் இன் செய்து, e-File > Income Tax Returns > View Filed Returns என்ற பகுதிக்கு செல்வதன் மூலம் மதிப்பீட்டு ஆண்டு 2026-27க்கான நேரலை ரீஃபண்ட் நிலையைக் கண்டறியலாம்.
ரீஃபண்ட் தாமதமாவது உங்களது அறிக்கையில் பிரச்சனை உள்ளது என்று அர்த்தமல்ல.
எனவே, போர்ட்டலைத் தொடர்ந்து கண்காணித்து, வருமான வரித் துறை அனுப்பும் அறிவிப்புகளுக்கு உடனுக்குடன் பதிலளிப்பதன் மூலம் ரீஃபண்ட் தொகையை விரைவாகப் பெற முடியும்.