Page Loader
சென்னை தொழிற்சாலையில் 2 புதிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆலைகளை அமைப்பதாக ஹூண்டாய் அறிவிப்பு
சென்னை தொழிற்சாலையில் 2 புதிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆலைகளை நிறுவ ஹூண்டாய் முடிவு

சென்னை தொழிற்சாலையில் 2 புதிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆலைகளை அமைப்பதாக ஹூண்டாய் அறிவிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Nov 21, 2024
03:48 pm

செய்தி முன்னோட்டம்

ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் (எச்எம்ஐஎல்) அதன் சென்னை தொழிற்சாலையில் இரண்டு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆலைகளை நிறுவுவதற்கான திட்டங்களை அறிவித்தது. 2025 ஆம் ஆண்டுக்குள் 100% புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தின் மூலம் தொழிற்சாலையை இயக்குவதை நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஃபோர்த் பார்ட்னர் எனர்ஜி லிமிடெட் (எஃப்பிஇஎல்) உடன் இணைந்து, எச்எம்ஐஎல் 75 மெகாவாட் சோலார் ஆலையையும் 43 மெகாவாட் காற்றாலை மின் நிலையத்தையும் உருவாக்க உள்ளது. க்ரூப் கேப்டிவ் மாடலின் கீழ் இயங்கும் சிறப்பு கூட்டு நிறுவனம் இதற்காக உருவாக்கப்பட்டு, அந்த நிறுவனம் பொறியியல், கட்டுமானம் மற்றும் பராமரிப்பு ஆகியவற்றை மேற்பார்வை செய்யும். இதில் எச்எம்ஐஎல் 26% பங்குகளை வைத்திருக்கும், எஃப்பிஇஎல் மீதமுள்ள 74% பங்குகளை வைத்திருக்கும்.

ஒப்பந்தம்

25 ஆண்டுகால ஒப்பந்தம்

நீண்ட கால ஒப்பந்தத்தின் மூலம் ஆதரிக்கப்படும் இந்த திட்டம், எச்எம்ஐஎல்லுக்கு 25 ஆண்டுகளுக்கு புதுப்பிக்கத்தக்க ஆற்றலை வழங்குவதற்கு உத்தரவாதம் அளிக்கிறது. இந்த திட்டத்தில் நிறுவனம் ₹38 கோடி முதலீடு செய்யும். தற்போது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தேவைகளில் 63% ஐ பூர்த்தி செய்துள்ள எச்எம்ஐஎல், இந்தியாவில் உள்ள மற்ற வாகன உற்பத்தியாளர்களை விட RE100 தரவரிசையை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. எஃப்பிஇஎல் இணை நிறுவனர் விவேக் சுப்ரமணியன், இந்த ஆலைகள் ஆண்டுதோறும் 25 கோடி யூனிட் சுத்தமான ஆற்றலை வழங்கும் என்றும், ஒவ்வொரு ஆண்டும் கார்பன் டை ஆக்ஸைடு வெளியேற்றத்தை 2 லட்சம் டன்கள் குறைக்கும் என்றும் கூறினார்.