பிஎஃப் வட்டி கணக்கில் சேர்ந்ததா? 8.25% வட்டி தொகையை ஆன்லைனில் சரிபார்ப்பது எப்படி? முழுமையான வழிகாட்டி
செய்தி முன்னோட்டம்
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (இபிஎஃப்ஓ), தனது சந்தாதாரர்களின் இபிஎஃப் (EPF) கணக்குகளில் 2025-26 நிதியாண்டிற்கான 8.25% ஆண்டு கூட்டு வட்டியை வரவு வைக்கத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் சுமார் 34 கோடிக்கும் அதிகமான கணக்குகளுக்கு ரூ.1.44 லட்சம் கோடி வட்டித் தொகை பகிர்ந்தளிக்கப்பட உள்ளது. இபிஎஃப்ஓவின் புதிய 'CITES' டிஜிட்டல் தொழில்நுட்ப மாற்றத்தின் காரணமாக, வழக்கமான ஆண்டுகளை விட இந்த முறை 2 முதல் 3 மாதங்களுக்கு முன்பாகவே வட்டித் தொகை கணக்குகளில் சேர்க்கப்பட்டு வருகிறது.
சரிபார்த்தல்
உங்கள் பிஎஃப் பாஸ்புக் பேலன்ஸை ஆன்லைனில் சரிபார்க்கும் எளிய வழிகள்
உங்கள் பிஎஃப் கணக்கில் 8.25% வட்டித் தொகை சேர்ந்துள்ளதா என்பதை அறிய இபிஎஃப்ஓவின் அதிகாரப்பூர்வ பாஸ்புக் இணையதள பக்கத்திற்குச் சென்று (passbook.epfindia.gov.in), உங்கள் UAN எண், கடவுச்சொல் மற்றும் கேப்ட்சா குறியீட்டைப் பதிவு செய்து லாக் இன் செய்ய வேண்டும்.
தொடர்ந்து உங்கள் மொபைல் எண்ணிற்கு வரும் ஓடிபியை பதிவு செய்து கணக்கிற்குள் நுழைந்து, 'View Passbook' என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்து 2025-26 நிதியாண்டிற்கான வட்டி வரவை சரிபார்க்கலாம்.
எஸ்எம்எஸ் வந்த பிறகும் பாஸ்புக்கில் உடனே காட்டப்படவில்லை எனில், கணக்குகள் கட்டம் கட்டமாகப் புதுப்பிக்கப்படுவதால் சில நாட்களில் விவரங்கள் மாற்றியமைக்கப்படும்.
மாற்று வழிமுறைகள்
உமங் செயலி பராமரிப்பு மற்றும் மாற்று வழிமுறைகள்
தற்போது உமங் செயலி பராமரிப்புப் பணிகளில் இருப்பதால், செயலி வழியாக பாஸ்புக்கைப் பார்ப்பதில் சில தாமதங்கள் அல்லது தொழில்நுட்ப சிக்கல்கள் ஏற்படக்கூடும்.
அத்தகைய சூழலில் பயனர்கள் எவ்வித பதற்றமும் அடையத் தேவையில்லை.
நேரடியாக இபிஎஃப்ஓவின் அதிகாரப்பூர்வ இணையதள பாஸ்புக் போர்ட்டல் மூலம் தங்களது கணக்கில் உள்நுழைந்து, புதுப்பிக்கப்பட்ட பி.எஃப் கணக்கு இருப்புத் தொகையை எளிய முறையில் சரிபார்த்துக் கொள்ளலாம்.
கணக்குகள் தொடர்ச்சியாகப் புதுப்பிக்கப்பட்டு வருவதால் விரைவில் அனைத்துச் சந்தாதாரர்களின் கணக்குகளிலும் வட்டித் தொகை முழுமையாகக் பிரதிபலிக்கும்.
இபிஎஃப் திட்டம் 2026
பணம் எடுக்கும் புதிய விதிகள்
புதிதாக மாற்றியமைக்கப்பட்டுள்ள இபிஎஃப் திட்டம் 2026ன் கீழ் பகுதி அளவு பணம் எடுக்கும் விதிகளில் முக்கியத் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
இதன்படி தகுதியுள்ள சந்தாதாரர்கள் தங்களது குறிப்பிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்காக சேமிப்பில் 75 சதவீதம் வரை பணமாகப் பெற விண்ணப்பிக்கலாம்.
அதே வேளையில், கட்டாயக் குறைந்தபட்ச இருப்பு விதியின் கீழ், பகுதி அளவு பணம் எடுத்த பிறகும் சந்தாதாரரின் ஓய்வூதிய சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்சம் 25 சதவீதம் (நான்கில் ஒரு பங்கு) நிதி இருப்புத் தொகையாகக் கட்டாயம் தொடர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.