
முதல்முறை கடன் பெறுவோருக்கு சிபில் ஸ்கோர் கட்டாயம் இல்லை; மத்திய நிதி அமைச்சகம் விளக்கம்
செய்தி முன்னோட்டம்
முதல்முறையாகக் கடன் வாங்குபவர்களுக்கு குறைந்த அல்லது பூஜ்ஜிய சிபில் ஸ்கோர் (CIBIL Score) இருப்பதைக் காரணம் காட்டி வங்கிகள் கடன் விண்ணப்பங்களை நிராகரிக்க முடியாது என மத்திய நிதி அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. இந்தத் தகவலை மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சௌத்ரி, சமீபத்தில் மக்களவையில் தெரிவித்தார். இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) ஏற்கனவே வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களை அவர் சுட்டிக்காட்டினார். முதல்முறை கடன் கோருபவர்களுக்கு கடன் வரலாறு இல்லாததால் அவர்களின் விண்ணப்பங்களை நிராகரிக்கக்கூடாது என்று வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. மேலும், வங்கிக் கடன் வழங்க குறைந்தபட்ச சிபில் ஸ்கோர் இருக்க வேண்டும் என எந்தவொரு விதிமுறையும் ரிசர்வ் வங்கி வகுக்கவில்லை என்றும் அமைச்சர் விளக்கினார்.
முடிவுகள்
முடிவுகள் எடுப்பதில் பின்பற்ற வேண்டியவை
வங்கிகள் தங்கள் வணிக ரீதியான முடிவுகளுக்கு ஏற்ப விண்ணப்பதாரரின் தகுதியை பல அம்சங்களின் அடிப்படையில் மதிப்பீடு செய்யலாம் என்று அவர் தெரிவித்தார். கடன் தகவல் அறிக்கையில் உள்ள தகவல்கள், ஒரு விண்ணப்பதாரரின் தகுதியைக் கண்டறியப் பயன்படுத்தப்படும் பல்வேறு அம்சங்களில் ஒன்று மட்டுமே என்றும் அவர் கூறினார். சிபில் ஸ்கோர் என்பது 300-900 வரையிலான மூன்று இலக்க எண் ஆகும். இது ஒரு தனிநபரின் கடன் வாங்கும் திறனைக் குறிக்கிறது. பொதுவாக, வீட்டுக் கடன், தங்கக் கடன் அல்லது தனிநபர் கடன் போன்றவற்றை அணுக இது ஒரு முக்கிய காரணியாகக் கருதப்படுகிறது. கடன் தகவல் நிறுவனங்கள் ஒரு தனிநபரின் கடன் அறிக்கையை வழங்க ரூ.100-க்கு மேல் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.