பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியைக் குறைத்தது மத்திய அரசு; அதன் அர்த்தம் என்ன?
செய்தி முன்னோட்டம்
சர்வதேச அளவில் நிலவும் எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியிலும், இந்திய நுகர்வோருக்கு பெரும் நிவாரணம் அளிக்கும் வகையில், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கூடுதல் உற்பத்தி வரியைக் (Excise Duty) குறைப்பதாக மத்திய அரசு இன்று அதிரடியாக அறிவித்துள்ளது. அதிகாரப்பூர்வ அரசிதழில் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி லிட்டருக்கு தலா ₹10 குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பெட்ரோல் மீதான வரி ₹3 ஆகக் குறைந்துள்ளதோடு, டீசல் மீதான கூடுதல் வரி முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடி மாற்றம் உடனடியாக அமலுக்கு வருகிறது. சர்வதேசச் சூழல் சாதகமாக இல்லாத நிலையிலும், இந்த வரிக்குறைப்பு நடவடிக்கை இந்தியப் பொருளாதாரத்தில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும், சாமானிய மக்களின் சுமையைக் குறைக்கவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நோக்கம்
பின்னணி மற்றும் நோக்கம்
மேற்கு ஆசியாவில் அமெரிக்கா - ஈரான் இடையே நிலவும் போர் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி முடக்கத்தால் உலக அளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சர்வதேசச் சந்தையில் விலை ஏறினாலும், உள்நாட்டில் அதன் தாக்கம் மக்களை பாதிக்காமல் இருக்க இந்த வரிக்குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மீதான நிதிச் சுமையைக் குறைத்து, சந்தையில் விலையை நிலைப்படுத்த உதவும்.
விமான எரிபொருள்
விமான எரிபொருள் மற்றும் ஏற்றுமதி விதிகள்
சாலைப் போக்குவரத்து எரிபொருட்களுக்கு விலைக்குறைப்பு வழங்கப்பட்டுள்ள அதே வேளையில், விமான எரிபொருள் (ATF) மீதான வரி உயர்த்தப்பட்டுள்ளது. அதன் மீதான வரி லிட்டருக்கு ₹50 ஆக நிர்ணயிக்கப்பட்டாலும், பல்வேறு சலுகைகளுக்குப் பிறகு அதன் நிகர வரி ₹29.50 ஆக இருக்கும். மேலும், பெட்ரோல் மற்றும் டீசல் ஏற்றுமதி மீதான வரிச் சலுகைகளை அரசு ரத்து செய்துள்ளது. இதன் மூலம் உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதி விதிகள் கடுமையாக்கப்பட்டாலும், நேபாளம், பூட்டான், வங்கதேசம் மற்றும் இலங்கை ஆகிய அண்டை நாடுகளுக்குப் பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும் எரிபொருட்களுக்குப் பழைய சலுகைகள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.