வாடிக்கையாளர் தவறு செய்தாலும் வங்கி தான் பொறுப்பு! ஃபெடெக்ஸ் மோசடியில் பணத்தை இழந்த பெண்ணுக்கு இழப்பீடு வழங்க உத்தரவு
செய்தி முன்னோட்டம்
ஹரியானாவின் குர்கான் நகரில் வசிக்கும் பெண் ஒருவரைத் தொடர்புகொண்ட மர்ம நபர், ஃபெடெக்ஸ் கொரியர் நிறுவனத்தில் இருந்து பேசுவதாகக் கூறி அவரது பெயரில் போதைப்பொருள் மற்றும் போலி பாஸ்போர்ட்டுகள் கொண்ட பார்சல் ஒன்று வந்துள்ளதாகப் பயமுறுத்தியுள்ளார். காவல்துறை நடவடிக்கை எடுப்பதாக மிரட்டியதால் பயந்துபோன அந்தப் பெண், மோசடி கும்பல் கொடுத்த ஐசிஐசிஐ வங்கி கணக்கிற்குத் தனது கைபேசி மூலமாக நான்கு முறை ஓடிபி செலுத்தி மொத்தம் ரூ.6.93 லட்சத்தை அனுப்பியுள்ளார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்ததும் அவர் உடனடியாக வங்கி மற்றும் சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
உத்தரவு
வங்கியின் மறுப்பும் வங்கி குறைதீர்ப்பாயத்தின் உத்தரவும்
வாடிக்கையாளர் தனது சொந்த விருப்பத்தின் பேரிலேயே ஓடிபி அங்கீகாரத்தை செய்து பணத்தை அனுப்பியதால், வங்கியின் மீது எந்தத் தவறும் இல்லை என்று கூறி பணத்தைத் திருப்பியளிக்க ஐசிஐசிஐ வங்கி மறுத்துவிட்டது.
இதையடுத்து அந்தப் பெண் வங்கி குறைதீர்ப்பாயத்தை அணுகிய போது, பாதிக்கப்பட்ட தொகைக்கு 25 சதவீதமாக ரூ. 1.75 லட்சத்தை வழங்குமாறு வங்கிக்கு உத்தரவிடப்பட்டது.
ஆனால் முழுத் தொகையையும் பெற விரும்பிய அந்தப் பெண், ரிசர்வ் வங்கியின் பூஜ்ஜிய பொறுப்பு விதிகளை சுட்டிக்காட்டி நாக்பூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் மேல்முறையீடு செய்து முறையிட்டார்.
வங்கி மீது தவறு
சந்தேகத்திற்குரிய கணக்கைக் கண்காணிக்கத் தவறிய வங்கி
இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் ஆணையம், மோசடி நபர் கணக்கு வைத்திருந்த ஐசிஐசிஐ வங்கி கணக்கின் நடவடிக்கைகளை ஆய்வு செய்தது.
ஆண்டுக்கு வெறும் ரூ.5 லட்சம் மட்டுமே வருமானம் ஈட்டும் ஒரு பிளாஸ்டிக் நிறுவனத்தின் கணக்கில், ஜனவரி 2023ல் மட்டும் சுமார் ரூ.2.84 கோடிக்கு அசாதாரணமான பணப் பரிவர்த்தனைகள் நடந்துள்ளன.
வங்கியின் சேவைக் குறைபாடு மற்றும் அலட்சியமே இந்த மோசடிக்குக் காரணம் எனத் தெரிவித்த நீதிமன்றம், இரு கணக்குகளும் ஒரே வங்கியில் இருந்ததால் வாடிக்கையாளருக்கு அந்தப் பரிவர்த்தனை உண்மையானது என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டது.
தீர்ப்பு
நுகர்வோர் நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு
வாடிக்கையாளர் ஓடிபி அளித்திருந்தாலும், சந்தேகத்திற்குரிய வங்கி கணக்குகளை முறையாக கண்காணிக்கத் தவறியதால் ஐசிஐசிஐ வங்கி சேவை குறைபாடு இழைத்துள்ளதாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதனால், மீதமுள்ள தொகையான ரூ. 5.18 லட்சத்தை 9 சதவீத வட்டியுடன் அந்தப் பெண்ணிற்குத் திரும்ப செலுத்த வேண்டும் என ஐசிஐசிஐ வங்கிக்கு உத்தரவிடப்பட்டது.
மேலும், பெண்ணிற்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.25,000 மற்றும் சட்ட செலவுகளுக்காக ரூ.10,000 வழங்கிட வேண்டும் என்றும் நாக்பூர் நுகர்வோர் ஆணையம் தனது தீர்ப்பில் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.