8வது ஊதியக் குழு தரவு சேகரிப்பு நிறைவு; அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய தகவல்
செய்தி முன்னோட்டம்
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் படிகளை மறுபரிசீலனை செய்ய அமைக்கப்பட்ட 8வது ஊதியக் குழு தனது அடுத்தகட்ட பணியை எட்டியுள்ளது. பல்வேறு அரசு அமைச்சகங்கள், துறைகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தங்களது அதிகாரப்பூர்வ ஊழியர் சார்ந்த தரவுகளைச் சமர்ப்பிப்பதற்கான இணையவழி காலக்கெடு ஜூலை 31 ஆம் தேதியுடன் அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்துள்ளது. இதன் மூலம் ஊதியக் குழு தனது முக்கியத் தரவு சேகரிப்பு கட்டத்தை வெற்றிகரமாக முடித்து, சேகரிக்கப்பட்டத் தரவுகளை பகுப்பாய்வு செய்யும் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு முன்னேறியுள்ளது.
முக்கியத்துவம்
தரவு சமர்ப்பிப்பு ஏன் முக்கியமானது?
ஊதியக் குழுவின் இந்த தரவு சேகரிப்பு சாதாரண நிர்வாக நடவடிக்கை அல்ல.
நாட்டின் அனைத்து அமைச்சகங்களும் தங்களது பணியாளர்களின் எண்ணிக்கை, தற்போதைய ஊதிய அமைப்பு, நிலுவையில் உள்ள காலியிடங்கள் மற்றும் நிதிப் தாக்கங்கள் குறித்த விரிவான தகவல்களை இணையவாயில் மூலம் பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டன.
ஊதிய உயர்வை நடைமுறைப்படுத்தினால் அரசுக்கு எவ்வளவு கூடுதல் செலவாகும் என்பதை துல்லியமாகக் கணக்கிடவும், புதிய ஊதிய அமைப்பை உருவாக்குவதற்கும் இந்தத் தரவுகள் மிக அத்தியாவசியமானவையாகும்.
முன்னதாக ஜூன் 30 ஆக இருந்த காலக்கெடு, பல துறைகளின் கோரிக்கையை ஏற்று ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தகுந்தது.
எதிர்பார்ப்பு
அடுத்த கட்ட நடவடிக்கைகள் மற்றும் எதிர்பார்ப்புகள்
தரவு சேகரிப்பு நிறைவடைந்த போதிலும், உடனடியாக ஊதிய உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகாது.
அடுத்த கட்டமாக, அரசு ஊழியர் சங்கங்கள், ஓய்வூதியதாரர் அமைப்புகள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஊதியக் குழு நேரடி கலந்தாய்வுகளை மேற்கொள்ளவுள்ளது.
டெல்லி தவிர சென்னை, புதுச்சேரி மற்றும் சண்டிகர் ஆகிய இடங்களுக்கும் ஊதியக் குழு நேரில் சென்று ஆலோசனைகளை நடத்தத் திட்டமிட்டுள்ளது.
தொழிலாளர் சங்கங்கள் கோரியுள்ள ஃபிட்மென்ட் ஃபேக்டர் (Fitment Factor) உயர்வு உள்ளிட்டக் கோரிக்கைகளை ஆய்வு செய்து, இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டு மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படும்.
அரசு இந்த அறிக்கையை ஏற்று ஒப்புதல் அளித்த பின்னரே புதிய ஊதிய விகிதம் அமலுக்கு வரும்.