தேசிய நெடுஞ்சாலை கட்டண விதிகள் 2026: டோல் கட்டணம் செலுத்தாவிட்டால் ஈ-நோட்டீஸ்! வாகன சேவைகள் முடக்கப்படலாம்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் வாகன உரிமையாளர்களுக்குப் புதிய கட்டுப்பாடுகளை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் கொண்டு வந்துள்ளது. 'தேசிய நெடுஞ்சாலை கட்டண விதிகள் 2026'ன் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த மாற்றங்கள் கடந்த மார்ச் 17, 2026 முதல் அமலுக்கு வந்துள்ளன. டிஜிட்டல் முறையில் டோல் வசூலை மேம்படுத்தவும், தடையற்ற பயணத்தை உறுதி செய்யவும் இந்த 'ஈ-நோட்டீஸ்' முறை அறிமுகமாகியுள்ளது.
விளக்கம்
ஈ-நோட்டீஸ் என்றால் என்ன?
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டோல் பிளாசாக்களைக் கடக்கும்போது, போதிய பேலன்ஸ் இல்லாமலோ அல்லது தொழில்நுட்பக் காரணங்களாலோ கட்டணம் செலுத்தத் தவறினால், வாகன உரிமையாளருக்கு மின்னணு முறையில் அறிவிப்பு அனுப்பப்படும். இதில் வாகனத்தின் விபரங்கள், பயணம் செய்த தேதி, இடம் மற்றும் செலுத்த வேண்டிய கட்டணத் தொகை ஆகியவை இடம்பெறும். இந்த நோட்டீஸ் எஸ்எம்எஸ், மின்னஞ்சல் அல்லது பிரத்யேக மொபைல் ஆப் மூலமாகப் பயனர்களுக்கு அனுப்பப்படும்.
விவரங்கள்
அபராதம் மற்றும் காலக்கெடு விவரங்கள்
புதிய விதிகளின்படி, ஈ-நோட்டீஸ் மூலம் கோரப்படும் கட்டணத்தைச் சரியான நேரத்தில் செலுத்துவது அவசியமாகும்: 72 மணி நேரம்: ஈ-நோட்டீஸ் வந்த 72 மணி நேரத்திற்குள் கட்டணத்தைச் செலுத்தினால், அசல் டோல் கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதும். கூடுதல் கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாது. அபராதத் தொகை: 72 மணி நேரத்திற்குப் பிறகு கட்டணம் செலுத்தினால், அசல் கட்டணத்தைப் போல இரண்டு மடங்கு அபராதமாகச் செலுத்த வேண்டியிருக்கும். 15 நாட்கள் கெடு: 15 நாட்களுக்கு மேலாகியும் கட்டணம் செலுத்தப்படாவிட்டால், அந்த விபரங்கள் 'வாகன்' தரவுத்தளத்தில் பதிவு செய்யப்படும்.
கட்டுப்பாடுகள்
வாகன் இணைப்பு மற்றும் கட்டுப்பாடுகள்
மத்திய அரசு இந்த புதிய முறையை வாகன் தரவுத்தளத்துடன் இணைத்துள்ளது. 15 நாட்களுக்கு மேல் டோல் கட்டணம் நிலுவையில் இருந்தால், அந்த வாகனத்திற்கான மற்ற சேவைகள் (எடுத்துக்காட்டாக: எப்சி அல்லது உரிமம் தொடர்பான சேவைகள்) முடக்கப்படலாம். இதனால் நிலுவைத் தொகையைச் செலுத்தும் வரை வாகன உரிமையாளர்கள் மற்ற அரசு சார்ந்த வாகனச் சேவைகளைப் பெற முடியாத நிலை ஏற்படும்.
புகார்கள்
புகார்களைத் தெரிவிக்கும் முறை
ஈ-நோட்டீஸில் ஏதேனும் தவறுகள் இருப்பதாக வாகன உரிமையாளர்கள் கருதினால், அவர்களுக்கு மேல்முறையீடு செய்யும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. நோட்டீஸ் வந்த 72 மணி நேரத்திற்குள் ஆன்லைன் தளம் வழியாகப் புகாரைப் பதிவு செய்யலாம். இந்தப் புகார்கள் ஐந்து நாட்களுக்குள் அதிகாரிகளால் தீர்க்கப்பட வேண்டும். தவறினால், அந்த நிலுவைத் தொகை கோரிக்கை தானாகவே ரத்து செய்யப்படும் என விதிகள் கூறுகின்றன.