டிசம்பர் மாதத்தில் கிடுகிடுவென உயர்ந்தது மஹிந்திரா எஸ்யூவி விற்பனை
2022 டிசம்பரில் 28,445 ஆக இருந்த மஹிந்திரா நிறுவனத்தின் பயணியர் வாகன விற்பனை 2023 டிசம்பரில் 35,174 யூனிட்களாக அதிகரித்துள்ளது. இதன்மூலம், விற்பனையில் 24% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இந்தியாவில் எஸ்யூவி கார்களுக்கான தேவை அதிகரித்து வருவதன் மூலம் இந்த வளர்ச்சியை மஹிந்திரா நிறுவனம் எட்டியுள்ளது. மஹிந்திரா & மஹிந்திரா லிமிடெட்டின் வாகனப் பிரிவின் தலைவர் வீஜே நக்ரா இதுகுறித்து கூறுகையில், "டிசம்பரில், நாங்கள் மொத்தம் 35,174 எஸ்யூவிகளை விற்றுள்ளோம். இது கடந்த ஆண்டை விட 24% ஆரோக்கியமான வளர்ச்சியைக் கண்டுள்ளது." என்று தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் - டிசம்பர் வரையிலான விற்பனையும் அதிகரிப்பு
2023-24 நிதியாண்டில் ஏப்ரல் முதல் டிசம்பர் 2023 வரையிலான முதல் மூன்று காலாண்டுகளின் முடிவில், மஹிந்திரா 3,33,764 எஸ்யூவிகளை விற்றது. இது கடந்த 2022-23 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 2,57,849 யூனிட்களை விற்றதுடன் ஒப்பிடும்போது 29% வளர்ச்சியாகும். இந்தியாவில் மஹிந்திரா நிறுவனம் தற்போது தார், ஸ்கார்பியோ என், ஸ்கார்பியோ கிளாசிக், XUV300, XUV700 மற்றும் பொலேரோ நியோ போன்ற பிரபலமான எஸ்யூவி மாடல்களைக் கொண்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் எஸ்யூவிகள் தவிர, XUV300 காம்பாக்டின் மறுவடிவமான XUV400 போன்ற எலக்ட்ரிக் கார்களையும் தயாரித்து வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.