"பதிப்புரிமை மற்றும் காப்புரிமைகள் இல்லாதது யோகா" : பிரதமர் மோடி
ஐநா சபையில் நடந்த சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, யோகா இந்தியாவில் உருவானது என்றாலும், அதற்கு பதிப்புரிமையும் காப்புரிமையும் கிடையாது என்று கூறினார். நியூயார்க்கில் உள்ள ஐநா சபை தலைமையகத்தில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஒன்பதாவது சர்வதேச யோகா தின விழா நடைபெற்றது. ஐநாவின் உயர்மட்ட அதிகாரிகள், தூதர்கள், உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் உலகளாவிய மற்றும் புலம்பெயர் இந்திய சமூகத்தின் முக்கிய உறுப்பினர்கள் இதில் கலந்து கொண்டனர். யோகா தின நிகழ்ச்சியில் பங்கேற்ற மோடி, அங்கு கடந்த ஆண்டு இந்தியா சார்பில் அமைக்கப்பட்ட மகாத்மா காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தினார்.
யோகா என்பது இணக்கமாக வாழ்வதற்கான ஒரு வழி
இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, யோகா என்பது தன்னுடனும், மற்றவர்களுடனும், இயற்கையுடனும் இணக்கமாக வாழ்வதற்கான வழி என்று கூறினார். மேலும், "மனிதகுலத்தின் மாபெரும் சந்திப்பில் நாம் இங்கு கூடியுள்ளோம். உங்களைப் பார்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன், இங்கு வந்ததற்கு நன்றி. கிட்டத்தட்ட எல்லா தேசத்தவர்களும் இங்கு கூடியுள்ளோம். யோகா இந்தியாவில் இருந்து வந்தது. இது மிகவும் பழமையான பாரம்பரியமாக இருந்தாலும், யோகாவுக்கு காப்புரிமைகள், பதிப்புரிமைகள் மற்றும் ராயல்டி செலுத்த தேவையில்லை. யோகா அனைத்து இனங்கள், நம்பிக்கைகள் மற்றும் கலாச்சாரங்களை உள்ளடக்கிய எந்த வயதினருக்கும் ஏற்ற உடற்பயிற்சி ஆகும்." என்று கூறினார். மேலும், 2023 ஆம் ஆண்டை தினை ஆண்டாக அறிவித்ததற்கு ஐநா சபைக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.