வீடியோ: நடுவானில் காற்றோடு பறந்த அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானத்தின் கதவு; பரபரப்பான சூழலில் அவசர தரையிறக்கம்
174 பயணிகளை ஏற்றி சென்ற அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானத்தின் அவசர வெளியேறும் கதவு நடுவானில் பிய்ந்து விழுந்ததால் அமெரிக்காவில் உள்ள போர்ட்லேண்டில் அவசரமாக தரையிறக்கப்பட்டது, இதனால், யாரேனும் காயமடைந்தார்களா என்பது உடனடியாகத் தெரியவில்லை. இந்த விமானம் போயிங் 737-9 MAX மூலம் இயக்கப்பட்டதாகும். இது ஒன்ராறியோவுக்குச் செல்வதற்கு புறப்பட்ட உடனேயே அதன் அவசர வெளியேறும் கதவு காற்றில் பறந்தது. இதனையடுத்து அந்த விமானம் வெள்ளிக்கிழமை மாலை 5:26 மணிக்கு(உள்ளூர் நேரம்) போர்ட்லேண்டில் தரையிறக்கப்பட்டது. அந்த விமானம் 16,000 அடி உயரத்திற்கு மேல் பறந்து கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்தது என்று விமான ஆய்வாளர்களின் தரவுகள் தெரிவிக்கின்றன.
விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை
இந்நிலையில், அந்த விமானகத்தில் பயணித்த பயணிகள் தங்களின் வேதனையான அனுபவத்தை பகிர்ந்து வருகின்றனர். "நான் என் கண்களை திறந்தவுடன் பார்த்தது எனக்கு முன்னால் இருந்த ஆக்ஸிஜன் முகமூடியைத்தான். அதன் பிறகு, நான் இடது பக்கம்திரும்பி பார்த்த போது, விமானத்தின் பக்கவாட்டில் உள்ள கதவை காணவில்லை. அப்போது நான் சாகப்போகிறேன் என்று தான் நினைத்தேன்." என்று 22 வயதான விமான பயணி கூறியுள்ளார். விபத்துக்குள்ளான அந்த விமானம் ஒரு புத்தம் புதிய விமானமாகும். இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் அசெம்பிளி லைனில் இருந்து வெளியேறி அது சான்றிதழைப் பெற்றது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும், அதற்கான காரணத்தை அதிகாரிகள் இன்னும் கண்டறியவில்லை என்றும் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.