Page Loader
அமெரிக்காவின் கடன் உச்சவரம்பை உடனடியாக உயர்த்த வேண்டும்.. எச்சரித்த கருவூல செயலாளர்! 
அமெரிக்க கருவூல செயலாளர் ஜானட் யெல்லன்

அமெரிக்காவின் கடன் உச்சவரம்பை உடனடியாக உயர்த்த வேண்டும்.. எச்சரித்த கருவூல செயலாளர்! 

எழுதியவர் Prasanna Venkatesh
May 02, 2023
11:46 am

செய்தி முன்னோட்டம்

கடன் உச்சவரம்பை காங்கிரஸ் உயர்த்தாவிட்டால் விரைவில் அமெரிக்கா விரைவில் நிதிநெருக்கடிக்கு ஆளாகும் என தெரிவித்துள்ளார் அமெரிக்காவின் கருவூலச் செயலாளர் ஜானட் யெல்லன். தற்போது அமெரிக்காவின் கடன் உச்சவரம்பு 31.8 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மேல் விரைவில் காங்கிரஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் ஜானட். இதுகுறித்து விவாதிப்பதற்காக மே 9-ம் தேதி தலைவர்கள் கூட்டம் ஒன்றிற்கு அழைப்பு விடுத்திருக்கிறார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன். அமெரிக்காவில் 1960 முதல் இதுவரை 78 முறை கடன் உச்சவரம்பு உயர்த்தப்பட்டிருக்கிறது அல்லது நீட்டிக்கப்பட்டிருக்கிறது. கடன் உச்சவரம்பு குறித்த தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றால், சில கோரிக்கைளை நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கிறார்கள் குடியரசுக் கட்சிப் பிரதிநிதிகள்.

அமெரிக்கா

கடன் உச்சவரம்பு: 

கடன் உச்சவரம்பு உயர்த்தப்படாவிட்டால், அமெரிக்காவால் பிற நாடுகளிடம் இருந்து கூடுதலாகக் கடன் பெற முடியாது. இதனால் அந்நாடு நிதி நெருக்கடிக்க ஆளாக நேரிடும். இதனைத் தொடர்ந்து அமெரிக்காவால் ஏற்கனவே வாங்கிய கடனிற்கு வட்டியோ அசலோ செலுத்த முடியாது. இதனால் அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டு, வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்கும். "தற்போது கையிருப்பில் இருக்கும் நிதி எப்போது முடியும் எனத் திட்டவட்டமாகக் கூற முடியாது. ஆனால், கடன் உச்சவரம்பை உயர்த்தாத பட்சத்தில் வரும் ஜூன் மாதம் அமெரிக்கா நிதிநெருக்கடிக்கு ஆளாகும். கடைசி நேரம் வரை இதுகுறித்த நடவடிக்கை எடுக்கப்படாமல் இழுத்தடிப்பது மேசமான விளைவுகளை ஏற்படுத்தும்" என எச்சரித்திருக்கிறார் ஜானட் யெல்லன்.