Page Loader
இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதல்: அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தது ஐ.நா

இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதல்: அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தது ஐ.நா

எழுதியவர் Sindhuja SM
Apr 14, 2024
09:12 am

செய்தி முன்னோட்டம்

சிரியாவில் உள்ள தனது தூதரக கட்டிடத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த ஈரான், இஸ்ரேல் மீது ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணை தாக்குதலை நேற்று நடத்தியது. இதனையடுத்து, இது தொடர்பாக ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டத்தை ஞாயிற்றுக்கிழமை நடத்தும் என்று அந்த அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், இஸ்ரேலின் வேண்டுகோளின் பேரில் பாதுகாப்பு கவுன்சில் இன்று மாலை 4:00 மணிக்கு (2000 GMT) கூட்டத்தை நடத்த உள்ளது. ஈரான் மற்றும் அதன் நட்பு நாடுகள் சேர்ந்து இஸ்ரேல் மீது ஒருங்கிணைந்த தாக்குதல்களை நடத்தியதால் இஸ்ரேல் மீது 200 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் ஏவப்பட்டன.

இஸ்ரேல்

 ஈரான் தூதரகத்தின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் 

"ஈரான் அரசு 200 க்கும் மேற்பட்ட கொலையாளி ட்ரோன்கள், பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் கப்பல் ஏவுகணைகளைஎங்கள் மீது ஏவியது" என்று இஸ்ரேலிய இராணுவ செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். சிரியாவின் டமாஸ்கஸில் உள்ள ஈரான் தூதரக வளாகத்தில் ஏப்ரல் 1 ஆம் தேதி நடந்த வான்வழித் தாக்குதலுக்குப் பழிவாங்குவதாக ஈரான் சபதம் செய்ததது. இந்த தாக்குதலில் ஒரு உயர்மட்ட ஈரானிய ஜெனரல் மற்றும் ஆறு ஈரானிய இராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டனர். தனது தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை தன் நாட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலாக ஈரான் பார்க்கிறது. இதனையடுத்து, இஸ்ரேல் மீது ஈரான் தற்போது தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதல் தற்காப்புக்காக நடத்தப்பட்டது என்று ஈரான் கூறியுள்ளது.