
விபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானத்தின் பராமரிப்பை மேற்கொண்டது துருக்கி நிறுவனமா? துருக்கி அரசு விளக்கம்
செய்தி முன்னோட்டம்
ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் இருந்து புறப்பட்ட பிறகு விபத்துக்குள்ளான ஏர் இந்தியா போயிங் 787-8 ட்ரீம்லைனருக்கு, தனது தேசிய விமான பராமரிப்பு நிறுவனமான துருக்கிய டெக்னிக் பராமரிப்பை மேற்கொண்டதாக சமூக ஊடகங்களில் தகவல் பரவிய நிலையில், துருக்கி அதை திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இதுகுறித்து துருக்கி அரசாங்கம் வெளியிட்டுள்ள ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கையில், துருக்கிய அதிகாரிகள் குற்றச்சாட்டுகளை தவறானவை மற்றும் ஆதாரமற்றவை என்று கூறி, இந்த குறிப்பிட்ட விமான மாதிரியில் துருக்கிய டெக்னிக் ஒருபோதும் பராமரிப்பு செய்யவில்லை என்பதை தெளிவுபடுத்தினர்.
துருக்கிய டெக்னிக் ஏர் இந்தியாவுடன் பராமரிப்பு ஒப்பந்தத்தை வைத்திருந்தாலும், ஒப்பந்தம் போயிங் 777 விமானங்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது என்றும் எந்த போயிங் 787-8 விமானங்களையும் சேர்க்கவில்லை என்றும் துருக்கி அதிகாரிகள் விளக்கினர்.
ஒப்பந்தம்
ஒப்பந்தத்தின் விபரம்
2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் கையெழுத்திடப்பட்ட இதற்கான ஒப்பந்தம், விபத்தில் தொடர்புடைய போயிங் மாடலை விலக்குகிறது.
"இன்றுவரை, துருக்கிய டெக்னிக் இந்த வகை எந்த ஏர் இந்தியா விமானத்திலும் பராமரிப்பு செய்யவில்லை" என்று துருக்கி தனது அறிக்கையில் உறுதிபடத் தெரிவித்துள்ளது.
242 பேருடன் லண்டன் கேட்விக் நோக்கிச் சென்று கொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் AI-171 விபத்துக்குள்ளானதற்கான காரணம் குறித்த தீவிர ஊகங்களுக்கு மத்தியில் இந்த விளக்கம் வந்துள்ளது.
அகமதாபாத்தின் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானம் விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் இருந்த 241 பேர் மற்றும் தரையில் இருந்த 31 பேர் கொல்லப்பட்டனர்.