ஹார்முஸ் ஜலசந்தி "புதிய அமெரிக்க பிராந்தியம்": டொனால்ட் டிரம்ப் பதிவால் அமெரிக்கா - ஈரான் இடையே உச்சக்கட்ட மோதல்
செய்தி முன்னோட்டம்
ஹார்முஸ் ஜலசந்தியை "அமெரிக்காவின் புதிய பிராந்தியம்" எனச் சித்தரிக்கும் வரைபடம் ஒன்றை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் பகிர்ந்துள்ளார். அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அமைதி ஒப்பந்தத்தை எட்டுவதற்காக அளிக்கப்பட்ட 60 நாட்கள் காலக்கெடு முடிவடைந்த நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் மேலும் தீவிரமடைந்துள்ளது.
உரிமைகோரல்
டிரம்பின் வரைபடப் பதிவு மற்றும் தொடர் உரிமைகோரல்
டிரம்ப் வெளியிட்டுள்ள வரைபடத்தில், பாரசீக வளைகுடாவிற்கும் ஓமன் நாட்டின் எல்லைக்கும் இடையே அமைந்துள்ள மிக முக்கியமான சர்வதேசக் கடல் வழியான ஹார்முஸ் ஜலசந்தியை வட்டமிட்டு, அதன் மீது "New US Territory" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கடற்படை முற்றுகை மூலம் அப்பகுதியை தங்கள் முழு கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாகவும், விரைவில் ஹோர்முஸ் பகுதியை அமெரிக்கப் பிராந்தியமாக அறிவிக்கப்போவதாகவும் டிரம்ப் சமீப நாட்களாகக் கூறிவந்த நிலையில், இந்தச் சர்ச்சை வரைபடத்தைப் பகிர்ந்துள்ளார்.
எச்சரிக்கை
ஈரானின் கடும் பதிலடி மற்றும் எச்சரிக்கை
டிரம்பின் இந்த பதிவிற்கு ஈரானின் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் காசெம் கரீபாபாடி மிகக் கடுமையான முறையில் பதிலளித்துள்ளார்.
"டிரம்பின் இந்த மனப்பிராந்தி விரைவில் திருத்தப்படும்; அல்லது இந்த மன நோயாளியின் மனப்பிராந்தியை நாங்களே திருத்துவோம்" என எச்சரித்துள்ளார்.
ஹார்முஸ் ஜலசந்தி எப்போதும் ஈரானுக்குச் சொந்தமானது என்றும், ஈரானின் உத்தரவின் பேரில் மட்டுமே இந்த கடல் பாதை திறக்கப்படும் அல்லது மூடப்படும் என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
அச்சுறுத்தல்
ஓமன் - ஈரான் ஒப்பந்தம் மற்றும் அமெரிக்க அச்சுறுத்தல்
ஹார்முஸ் கடல் வழியில் கப்பல் போக்குவரத்தைச் சீரமைப்பது தொடர்பாக ஈரானும் ஓமனும் இணைந்து புதிய வரைபடம் மற்றும் வழிகாட்டுதல்களை உருவாக்கி முடித்துள்ளதாக ஈரானிய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
இருப்பினும், ஈரானியக் கப்பல்கள் மீதான அமெரிக்க முற்றுகைக்கு ஓமன் உதவியாக இருந்தால், அந்நாட்டின் மீதும் குண்டுவீச்சு நடத்தப்படும் என டிரம்ப் ஃபாக்ஸ் நியூஸ் பேட்டியில் மிரட்டல் விடுத்துள்ளார்.
அமைதிப் பேச்சுவார்த்தை முறிந்த நிலையில், உலகளவில் 20% எண்ணெய் விநியோகத்தை தீர்மானிக்கும் ஹோர்முஸ் பாதையில் மோதல் உச்சத்தை எட்டியுள்ளது.