
ராமர் பாலம் காண சுற்றுலா படகு சவாரி - மே 15 முதல் இலங்கையில் தொடக்கம்
செய்தி முன்னோட்டம்
இலங்கை அரசு, சாகசத்தை விரும்பும் சுற்றுலா பயணிகளுக்காக புதிய முயற்சியை மேற்கொண்டு வருகிறது.
வரலாற்று சிறப்புமிக்க ராமர் பாலத்தை காணும் நோக்கில், மே 15 முதல் மன்னார் பகுதியில் இருந்து சுற்றுலா படகு சேவையை துவக்க உள்ளது.
இந்த திட்டத்தின் மூலம், இலங்கை மற்றும் இந்தியா இடையே கடலில் காணப்படும் ராமர் பாலத்தின் மணல் திட்டுகளை சுற்றுலா பயணிகள் நேரில் காணலாம்.
ராமேஸ்வரம் தனுஷ்கோடியிலிருந்து இலங்கையின் தலைமன்னார் வரையிலுமான கடல் பகுதியில் மொத்தம் 14 முதல் 18 வரை மணல் திட்டுகள் உள்ளன.
இதில் 6 திட்டுகள் இந்தியப் பகுதியிலும், 7 திட்டுகள் இலங்கை கடல் பகுதியிலும் உள்ளன.
இதில் இலங்கை பகுதியிலுள்ள திட்டுகளை காண அந்நாட்டின் சுற்றுலாத்துறை ஏற்பாடு செய்து வருகிறது.
விவரங்கள்
சுற்றுலா மூலம் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க இலங்கை திட்டம்
முன்னதாக 1914 முதல் 1964 வரை கப்பல் போக்குவரத்து இருந்த போது, பயணிகள் ராமர் பாலத்தைக் கண்டு தரிசித்து சென்றதாக வரலாறு கூறுகிறது.
இப்போது, இந்த பழைய வழியை சுற்றுலா நோக்கத்தில் மீட்டெடுக்க இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பான முடிவுகள், இலங்கை மன்னார் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்டது.
இதில் சுற்றுலா துறை, பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
இத்திட்டம் மூலம், உள்ளூர் மக்களே, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளையும் ஈர்த்து பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க இலங்கை அரசு நம்பிக்கை தெரிவிக்கிறது.