இலங்கையை அச்சுறுத்தும் டெங்கு வைரஸ்: 76,000-க்கும் அதிகமானோர் பாதிப்பு, ட்ரோன்களைப் பயன்படுத்தும் ராணுவம்
செய்தி முன்னோட்டம்
இலங்கையில் கடந்த ஜனவரி மாதம் முதல் டெங்கு காய்ச்சலின் தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில், இதுவரை 76,044க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 53 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த பாதிப்பு எண்ணிக்கை, நாட்டில் கடந்த 2017-ஆம் ஆண்டு ஏற்பட்ட மோசமான டெங்கு பரவலின் (1,00,000க்கும் அதிகமான பாதிப்புகள்) அளவை நெருங்கி வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இப்பரவலை கட்டுப்படுத்த இலங்கை அரசும், ராணுவமும் இணைந்து தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
நிலைமை
டெங்கு பரவலின் தற்போதைய நிலை
கட்டிடங்களின் கூரைகளில் தேங்கியுள்ள தண்ணீர் மற்றும் கொசுக்கள் உருவாகும் இடங்களைக் கண்டறிய இலங்கை விமானப்படை ட்ரோன்களை பயன்படுத்தி வருகிறது.
மேலும், மருத்துவமனைகளில் நோயாளிகளின் நிலையை கண்காணிக்கவும் இவை உதவுகின்றன.
ஜூலை மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் மட்டும் 18,000க்கும் மேற்பட்டோர் புதிதாக பாதிக்கப்பட்டதால், கூடுதல் படுக்கைகள் அமைத்தல் மற்றும் தீவிர சிகிச்சை பிரிவுகளை ஏற்படுத்துதல் என சுகாதார ஊழியர்கள் பெரும் சவாலை சந்தித்து வருகின்றனர்.
தற்போதைய பாதிப்புகளில் சுமார் 75% DENV-2 ரக வைரஸால் ஏற்படுபவை என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது மற்ற ரகங்களை விட அதிவேகமாகவும் தீவிரமாகவும் பரவக்கூடியது.
நடவடிக்கை
அரசு எடுத்து வரும் நடவடிக்கை
ராணுவம், காவல்துறை மற்றும் சுகாதாரத் துறையினர் இணைந்து வீடுகள், பள்ளிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த ஜூலை மாதத்தில் மட்டும் சுமார் 11,000 கொசு உற்பத்தி மையங்கள் அழிக்கப்பட்டுள்ளன.
மேலும், கொசுக்கள் பெருகும் வகையில் இடங்களை வைத்திருந்த 4,000க்கும் மேற்பட்ட வளாகங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் மாதத்தில் தென்மேற்குப் பருவமழை குறையும் போது நோய்த்தொற்று கட்டுக்குள் வரலாம் என எதிர்பார்க்கப்பட்டாலும், ஆண்டின் பிற்பகுதியில் தொடங்கும் அடுத்த மழைக்காலத்தில் பாதிப்பு மீண்டும் உயரக்கூடும் என மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.