Loading...
2015 முதல் 2023 வரை தமிழகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பெரும் முறைகேடு; ரூ.10,000 கோடியில் விதிகள் மீறல்
2015 முதல் 2023 வரையிலான காலத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து செயல்திறன் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது

2015 முதல் 2023 வரை தமிழகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பெரும் முறைகேடு; ரூ.10,000 கோடியில் விதிகள் மீறல்

எழுதியவர் Venkatalakshmi V
Sep 09, 2026
10:54 am

செய்தி முன்னோட்டம்

மத்திய அரசின் ரூ.10,000 கோடி மதிப்பிலான ஸ்மார்ட் சிட்டி மிஷன் திட்டங்களில் நடத்தப்பட்ட முதல் முதன்மையான கணக்காய்வு அறிக்கையில், தமிழ்நாட்டில் பெருமளவிலான நிதி முறைகேடுகள் மற்றும் விதிமீறல்கள் நடந்துள்ளதாக இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் (CAG) சுட்டிக்காட்டியுள்ளது. சென்னை உட்பட தமிழ்நாட்டின் 11 ஸ்மார்ட் நகரங்களில் 7 நகரங்களில் 2015 முதல் 2023 வரையிலான காலத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து செயல்திறன் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில், அசல் ஸ்மார்ட் சிட்டி திட்ட முன்மொழிவுகளில் சேர்க்கப்பட்டிருந்த ரூ.1,602.20 கோடி மதிப்பிலான 52 திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. அதே வேளையில், எவ்விதத் திட்டமிடலும் இல்லாத 44 புதிய திட்டங்கள் ரூ.623.86 கோடி செலவில் புதிதாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

செலவழிக்கப்பட்ட விதம்

ஒதுக்கப்பட்ட எல்லைகளை தாண்டி நிதி செலவழிக்கப்பட்ட விதம்

திட்டமிடப்படாமல் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களில், 21 திட்டங்கள் ரூ.184.71 கோடி செலவில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக அங்கீகரிக்கப்பட்ட எல்லை பகுதிகளுக்கு முற்றிலும் வெளியே செயல்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், சம்பந்தப்பட்ட மாநகராட்சிகளே தங்களின் சொந்த நிதியில் செய்திருக்க வேண்டிய சாதாரண நடைமுறை பணிகளான 5 திட்டங்களுக்கு, ஸ்மார்ட் சிட்டி நிதியிலிருந்து ரூ.21.42 கோடி செலவிடப்பட்டுள்ளது.

சென்னை உட்பட ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 7 நகரங்களில், முறையான அவசிய காரணங்கள் ஏதுமின்றி ₹1,602.20 கோடி மதிப்பிலான 52 அங்கீகரிக்கப்பட்ட திட்டங்கள் கைவிடப்பட்டுள்ளன.

மாறாக, ₹623.86 கோடி செலவில் 44 திட்டமிடப்படாத பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

திட்ட விலகல்கள்

நெல்லை மற்றும் சென்னை மாநகராட்சிகளின் திட்ட விலகல்கள்

திட்டமிடப்படாத பணிகளைச் செய்ததில் திருநெல்வேலி மாநகராட்சி முதலிடத்தில் உள்ளது. அங்கு 15 திட்டங்கள் ரூ.314.62 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இத்தகைய திட்டமிடப்படாத பணிகளில் சென்னை மாநகராட்சி வளாகத்தில் அமைக்கப்பட்ட பசுமை மையம், கோவையில் உள்ள நேரு விளையாட்டு அரங்கில் அமைக்கப்பட்ட விளக்குகள், திருநெல்வேலியில் கட்டப்பட்ட விருந்தினர் விடுதி மற்றும் மதுரையில் அமைக்கப்பட்ட மாநாட்டு மையம் ஆகியவை அடங்கும்.

அனுமதிக்கப்படாத செலவுகளான கார்கள், கணினிகள் மற்றும் சட்டக் கட்டணங்களுக்காக ₹23.83 கோடியை 6 நகரங்கள் பயன்படுத்தியுள்ளன.

கோயம்புத்தூரில் குடிநீர் திட்டத்திற்கு ₹150.73 கோடி மாற்றப்பட்டதும் விதிகளுக்கு எதிரானது என அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

ADVERTISEMENT

செலவின மீறல்கள்

விளம்பரம் மற்றும் பிற செலவின மீறல்கள்

சென்னையில் மாநில அரசின் விளம்பரங்களுக்காக ₹66.58 லட்சமும், குடும்பங்கள் மீள்குடியேற்றத்திற்கு ₹15.33 கோடியும் ஸ்மார்ட் சிட்டி நிதியிலிருந்து செலவிடப்பட்டுள்ளன.

மேலும், திருப்பூரில் LED டிவி, தளவாடங்கள் வாங்கவும், ஈரோட்டில் நிலத்தடி கழிவுநீர் ஊழியர்களின் சம்பளத்திற்கு ₹2.59 கோடியும், சேலத்தில் ரூ.2.95 கோடியும் பிற தலைப்புகளில் திருப்பப்பட்டுள்ளன.

மத்திய அரசு தன் பங்களிப்பான ₹5,000 கோடியை முழுமையாக விடுவித்தும், தமிழ்நாடு அரசு விதியை மீறி ₹1,127 கோடியைத் தனிநபர் வைப்புக் (PD) கணக்குகளுக்கு மாற்றியது.

மேலும், நிதியை ஸ்மார்ட் சிட்டி அமைப்புகளுக்கு மாற்றுவதில் ஏற்பட்ட 960 நாட்கள் வரையிலான தாமதத்தால் ஈட்டப்பட்ட ₹239.40 கோடி வட்டி வருவாயில் ₹149.01 கோடி மட்டுமே திரும்ப வழங்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT