LOADING...
ஓமான் நாட்டின் உயரிய விருது: நெல்சன் மண்டேலா, ராணி எலிசபெத் வரிசையில் பிரதமர் மோடி!
பிரதமர் மோடிக்கு ஓமான் நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவிப்பு

ஓமான் நாட்டின் உயரிய விருது: நெல்சன் மண்டேலா, ராணி எலிசபெத் வரிசையில் பிரதமர் மோடி!

எழுதியவர் Sekar Chinnappan
Dec 18, 2025
05:54 pm

செய்தி முன்னோட்டம்

பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாடுகளுக்கானத் தனது அரசுமுறைப் பயணத்தின் இறுதிக்கட்டமாக ஓமான் நாட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு அவருக்கு அந்நாட்டின் மிக உயரிய சிவிலியன் விருதான 'ஆர்டர் ஆஃப் ஓமான்' வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதினை ஓமான் நாட்டின் சுல்தான் ஹைதம் பின் தாரிக் மஸ்கட்டில் உள்ள அல் பராக்கா அரண்மனையில் வைத்துப் பிரதமருக்கு வழங்கினார். இந்த உயரிய விருதினை இதற்கு முன்பு முக்கியமான உலகத் தலைவர்களான நெல்சன் மண்டேலா, இரண்டாம் ராணி எலிசபெத், ஜப்பான் பேரரசர் அக்கிஹிட்டோ மற்றும் ஜோர்டான் மன்னர் அப்துல்லா ஆகியோர் பெற்றுள்ளனர். இதன் மூலம் இந்தச் சிறப்புமிக்க விருதைப் பெறும் மிகச் சில உலகத் தலைவர்களில் ஒருவராகப் பிரதமர் மோடி மாறியுள்ளார்.

விருது

29வது சர்வதேச விருது

பிரதமர் மோடிக்குப் பல்வேறு நாடுகள் வழங்கிய உயரிய விருதுகளின் பட்டியலில் இது 29வது சர்வதேச விருதாகும். குறிப்பாக, இந்த ஒரே வாரத்தில் அவர் பெற்ற இரண்டாவது உயரிய விருது இதுவாகும். இதற்குச் சில நாட்களுக்கு முன்புதான் எத்தியோப்பியா நாட்டின் உயரிய விருதான தி கிரேட் ஹானர் நிஷான் அவருக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. விருது வழங்கும் நிகழ்வுக்குப் பிறகு இரு நாட்டுத் தலைவர்களும் விரிவானப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

முக்கிய அம்சங்கள்

பேச்சுவார்த்தையின் முக்கிய அம்சங்கள்

வர்த்தக ஒப்பந்தம் (CEPA): இந்தியா மற்றும் ஓமான் இடையே ஒரு விரிவானப் பொருளாதாரக் கூட்டாண்மை ஒப்பந்தம் (Free Trade Agreement) கையெழுத்தானது. இது இரு நாடுகளுக்கும் இடையே வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், வர்த்தகத்தை அதிகரிக்கவும் உதவும். 70 ஆண்டுகால உறவு: இந்தியா - ஓமான் இடையிலான தூதரக உறவுகள் தொடங்கி 70 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி இந்தப் பயணம் அமைந்துள்ளது. பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு: பாதுகாப்பு, எரிசக்தி, தொழில்நுட்பம், விவசாயம் மற்றும் கலாச்சாரம் ஆகிய துறைகளில் இணைந்து செயல்பட இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்துள்ளன.

Advertisement