Page Loader
விலங்குகளைவிட கேவலமாக நடத்தப்படுகிறோம் - ஆப்கான் பெண்கள் வேதனை
அரசு சாரா தொண்டு நிறுவனங்களிலும்(NGO) பெண்கள் வேலை செய்வதற்கு தடை!(படம்: Times of India)

விலங்குகளைவிட கேவலமாக நடத்தப்படுகிறோம் - ஆப்கான் பெண்கள் வேதனை

எழுதியவர் Sindhuja SM
Dec 26, 2022
06:40 pm

செய்தி முன்னோட்டம்

கடந்த வாரம், தாலிபான் அரசு பெண்கள் உயர்கல்வி கற்பதற்கு தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, தற்போது அந்த நாட்டு பெண்கள் தரப்பில் இருந்து பெரும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. கடந்த ஆண்டு, தாலிபான் ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றியது. அப்போதிலிருந்து, பெண்களுக்கு பலவிதமான தடைகள் விதிக்கப்பட்டு வருகின்றன. பெண்கள் ஆண் துணையில்லாமல் வெளியே செல்ல தடை, விமானத்தில் பயணிக்க தடை, கடுமையான ஆடை கட்டுப்பாடுகள், டீனேஜ் பெண்கள் பள்ளிகளுக்கு செல்ல தடை என்று பெண்களுக்கு எதிரான பல்வேறு தடைகள் ஏற்கனவே ஆப்கானில் அமல்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த வாரம் தாலிபான் அரசு பெண்கள் உயர் கல்வி கற்பதற்கும் தடை விதித்திருக்கிறது.

போராட்டம்

போராட்டத்தில் குதித்திருக்கும் எதிர்ப்பாளர்கள்!

தங்கள் கனவுகளை இப்படி உடைத்து எறிவதற்கு பேசாமல் "பெண்களின் தலையைத் துண்டிக்க உத்தரவிட்டிருக்கலாம்' என்று மருத்துவ மேல் படிப்பைத் தொடர முடியாமல் தவிக்கும் இளம்பெண் ஒருவர் செய்தி தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்திருக்கிறார். மேலும் பேசிய அந்த பெண், "மிருகங்களுக்கு இருக்கும் சுதந்திரம் கூட பெண்களுக்கு இல்லை. நான் ஏன் இந்த உலகில் பிறந்தேன் என்று வருந்துகிறேன். இப்படி ஒரு உத்தரவிட்டதற்கு பதிலாக எங்கள் தலையைத் துண்டிக்க உத்திரவிட்டிருக்கலாம்." என்று கண்களில் நீரோடு கதறுகிறார். இந்த ஒடுக்குமுறையை எதிர்த்து ஆப்கானிஸ்தான் ஆசிரியர்கள், மாணவர்கள், பெண்கள் என்று பலதரப்பினரும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். மேலும், தற்போது அரசு சாரா தொண்டு நிறுவனங்களிலும்(NGO) பெண்கள் வேலை செய்வதற்கு தடை அமல்படுத்தப்பட்டுள்ளது.