LOADING...
பிரிக்ஸ் அமைப்பின் புதிய வளர்ச்சி வங்கியில் சேர சீனாவிடம் பாகிஸ்தான் ஆதரவு கோரிக்கை
பிரிக்ஸ் வளர்ச்சி வங்கியில் சேர சீனாவிடம் பாகிஸ்தான் கோரிக்கை

பிரிக்ஸ் அமைப்பின் புதிய வளர்ச்சி வங்கியில் சேர சீனாவிடம் பாகிஸ்தான் ஆதரவு கோரிக்கை

எழுதியவர் Sekar Chinnappan
Oct 17, 2025
09:01 pm

செய்தி முன்னோட்டம்

கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள பாகிஸ்தான், மேற்கத்திய நிதி நிறுவனங்களான ஐஎம்எப் மற்றும் உலக வங்கியின் கடுமையான நிபந்தனைகளிலிருந்து விலகி, நிதி ஆதாரங்களைப் பல்வகைப்படுத்த உதவும் நோக்குடன், பிரிக்ஸ் அமைப்பின் நிதிக் கிளையான புதிய வளர்ச்சி வங்கியில் (NDB) உறுப்பினராகச் சேர சீனாவின் ஆதரவை முறைப்படி நாடியுள்ளது. பாகிஸ்தான் நிதி அமைச்சர் முகமது அவுரங்கசீப் வாஷிங்டனில் சீன துணை நிதி அமைச்சர் லியாவோ மின்னைச் சந்தித்தபோது இந்தக் கோரிக்கையைச் சமர்ப்பித்தார். பிரிக்ஸ் வளர்ச்சி வங்கியில் சேருவதற்கான சீனாவின் ஆதரவைக் கோரிய அவுரங்கசீப், தகவல் மற்றும் தொடர்புத் தொழில்நுட்பம் (ICT), விவசாயம், தொழில் மற்றும் கனிமங்கள் உள்ளிட்ட முக்கியத் துறைகளில் சீன நிறுவனங்களின் முதலீட்டை வரவேற்பதாகவும் பாகிஸ்தான் நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

பிரிக்ஸ் வங்கி

பிரிக்ஸ் வங்கியின் பின்னணி

இந்தியா மற்றும் பிற பிரிக்ஸ் நாடுகளால் 2015 இல் கூட்டாக நிறுவப்பட்ட, ஷாங்காயைத் தலைமையிடமாகக் கொண்ட பிரிக்ஸ் வங்கி, வளரும் நாடுகளில் உள்கட்டமைப்பு மற்றும் நீடித்த வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி வழங்குகிறது. பாகிஸ்தானின் அமைச்சரவையின் பொருளாதார ஒருங்கிணைப்புக் குழு (ECC) கடந்த பிப்ரவரியிலேயே பிரிக்ஸ் வங்கியில் நாட்டின் உறுப்பினர் முயற்சிக்கு ஒப்புதல் அளித்திருந்தது. பாகிஸ்தானின் இந்தக் கோரிக்கை, பிரிக்ஸ் கூட்டமைப்பு 2024 இல் சவுதி அரேபியா, ஈரான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எகிப்து மற்றும் எத்தியோப்பியா என விரிவாக்கப்பட்ட சூழலில், மேற்கத்தியர் அல்லாத நிதியமைப்பிலிருந்து மூலதனத்தைப் பெறுவதற்குத் தனது இரும்பு நண்பனான சீனாவைப் பயன்படுத்தும் அதன் உத்தியை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.