சீனர்களால் நடத்தப்படும் வணிகங்களுக்கு சீல் வைத்த பாகிஸ்தான்
பாகிஸ்தானில் சீனர்கள் நடத்தும் வணிகங்களை கராச்சி காவல்துறை தற்காலிகமாக மூடியுள்ளது. பயங்கரவாதத் தாக்குதல்களை தடுப்பதற்கு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிக்கேய் ஆசியா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. தீவிரவாதிகள் சமீப ஆண்டுகளாக பாகிஸ்தானில் உள்ள சீன வணிகங்களை குறிவைத்து வருவதாக கூறப்படுகிறது. இது இஸ்லாமாபாத் மற்றும் பெய்ஜிங்கிற்கு இடையிலான இருதரப்பு உறவுகளை பலவீனப்படுத்தும் என்ற அச்சம் எழுந்துள்ளது. சமீபத்தில் இஸ்லாமாபாத்தில் உள்ள தூதரகத்தை சீனா மூடியதாக செய்திகள் கூறுகின்றன. மேலும், பாகிஸ்தானில் உள்ள "மோசமான பாதுகாப்பு நிலைமை" காரணமாக சீனர்கள் ஆபத்தில் இருக்கின்றனர் என்று அதன் குடிமக்களுக்கு சீனா எச்சரிக்கை விடுத்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 2022 இல் நடந்த பயங்கரவாத தாக்குதல்
"பலமுறை எச்சரித்த போதிலும், பல சீன நிறுவனங்கள் பாதுகாப்பு நெறிமுறைகளை செயல்படுத்தத் தவறியதால், அவை சீல் வைக்கப்பட்டன." என்று கராச்சி காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். பெய்ஜிங் தனது சொந்த பொருளாதார நலன்களுக்காக தங்கள் நிலத்தை ஆக்கிரமித்து வருகிறது என்று பாகிஸ்தானிய மக்கள் சந்தேகிப்பதால் சீனாவுக்கு எதிரான உணர்வுகள் பாகிஸ்தானில் அதிகரித்து வருகின்றன. இதன் விளைவாக, சீன நாட்டவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பாகிஸ்தான் அதிகாரிகள் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை. ஏப்ரல் 2022இல் நடந்த ஒரு பயங்கரவாத தாக்குதல் சீனர்களுக்கு எதிராக நடந்த ஒரு முக்கிய தாக்குதலாகும். அப்போது, கராச்சி பல்கலைக்கழகத்தில் உள்ள கன்பூசியஸ் இன்ஸ்டிடியூட் அருகே நடந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் மூன்று சீன ஆசிரியர்களும் ஒரு பாகிஸ்தானிய ஓட்டுநரும் கொல்லப்பட்டனர்.