
பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் தெரியாம சொல்லிட்டார்; சிம்லா ஒப்பந்தம் நடைமுறையில் உள்ளதாக பாகிஸ்தான் விளக்கம்
செய்தி முன்னோட்டம்
ராஜதந்திர குழப்பத்தைத் தணிக்கும் முயற்சியில், இந்தியாவுடனான 1972 சிம்லா ஒப்பந்தம் அப்படியே உள்ளது என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெள்ளிக்கிழமை (ஜூன் 6) தெளிவுபடுத்தியது.
முன்னதாக, இந்த ஒப்பந்தத்தை செயலில்லா ஆவணம் என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் கூறிய நிலையில், இது அவரது சொந்தக் கருத்து என்றும், அரசின் நிலைப்பாடு அல்ல என்றும் விளக்கம் அளித்துள்ளது.
முன்னதாக, கவாஜா ஆசிஃப் ஒரு தொலைகாட்சி நேர்காணலில் ஜம்மு காஷ்மீரில் இந்தியா 370வது பிரிவை ரத்து செய்ததன் மூலம், சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்து, 1948 ஐநா போர் நிறுத்தக் கட்டமைப்பிற்கு நிலைமையை பின்தள்ளியதாகக் கூறிய ஒரு நாளுக்குப் பிறகு இந்த தெளிவுபடுத்தல் வந்தது.
கவாஜா ஆசிஃப்
கவாஜா ஆசிஃப் விமர்சனம்
இந்தியாவின் ஒருதலைப்பட்ச நடவடிக்கைகள் இருதரப்பு உறவின் முக்கிய தூண்களை சிதைத்ததாகக் கூறி, சிந்து நதி நீர் ஒப்பந்தம் உட்பட பிற இருதரப்பு ஏற்பாடுகளின் நிலையும் கவாஜா ஆசிஃப் கேள்வி எழுப்பினார்.
குறிப்பாக ஏப்ரல் மாதம் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் மே மாதம் இந்தியாவின் பதிலடி ராணுவ நடவடிக்கைகளுக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் அவரது கருத்துக்கள் வந்தன.
இதற்கு உடனடியாக பதிலளித்த பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் , சிம்லா ஒப்பந்தத்தையோ அல்லது வேறு எந்த இருதரப்பு ஒப்பந்தத்தையோ ரத்து செய்ய எந்த முறையான முடிவும் எடுக்கப்படவில்லை என்பதை மீண்டும் உறுதிப்படுத்தும் ஒரு அறிக்கையை வெளியிட்டது.
நடைமுறை
அனைத்து ஒப்பந்தங்களும் நடைமுறையில் உள்ளன
தற்போதுள்ள அனைத்து ஒப்பந்தங்களும் நடைமுறையில் உள்ளன என்றும், சாத்தியமான திருத்தங்கள் தேவைப்பட்டால் உரிய ராஜதந்திர நடைமுறைகளைப் பின்பற்றி மேற்கொள்ளப்படும் என்றும் கூறியுள்ளது.
முன்னதாக, 1971 இந்தியா பாகிஸ்தான் போருக்குப் பிறகு 1972 இல் கையெழுத்திடப்பட்ட சிம்லா ஒப்பந்தம், இந்தியா-பாகிஸ்தான் ராஜதந்திரத்தின் ஒரு முக்கிய அம்சமாகும்.
இது மோதல்களுக்கு அமைதியான, இருதரப்பு தீர்வை வலியுறுத்தி உள்ளது. இதற்கிடையே, பாகிஸ்தானின் அணுசக்தி நிலைப்பாட்டையும் அமைச்சர் ஆசிஃப் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
அதாவது பாகிஸ்தானின் இருப்பிற்கே ஆபத்து வரும் சூழலில் மட்டுமே அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படும் என்று விளக்கி இருந்தார்.