பென்டகன், வெள்ளை மாளிகையை உளவு செயற்கைக்கோள் படம் பிடித்ததாக கூறும் வட கொரியா
அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன், வெள்ளை மாளிகை, மற்றும் அருகிலுள்ள அமெரிக்க கடற்படை நிலையங்களை, புதிதாக ஏவிய உளவு செயற்கைக்கோள் படம் பிடித்துள்ளதாக வட கொரியா கூறியுள்ளது. கடந்த வாரம் விண்வெளியில் ஏவப்பட்ட தனது உளவு செயற்கைக்கோளை பயன்படுத்தி, வட கொரியா புகைப்படம் எடுத்ததாகக் கூறும் பகுதிகளின் பட்டியலில் அமெரிக்காவின் பல முக்கிய தளங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், ரோம், குவாமில் உள்ள ஆண்டர்சன் விமானப்படை தளம், பேர்ல் துறைமுகம் மற்றும் அமெரிக்க கடற்படையின் கார்ல் வின்சன் விமானம் தாங்கி கப்பல் ஆகிய புகைப்படங்களை, அதிபர் கிம் ஜாங் உன் பார்த்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
வட கொரிய தகவலை வேறு எந்த நாடுகளும் உறுதிப்படுத்தவில்லை
வடகொரியா பாலிஸ்டிக் ஏவுகணை தொழில்நுட்பத்தை பயன்படுத்த பல்வேறு ஐநா தீர்மானங்கள் தடை விதித்திருக்கும் நிலையில், அந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கடந்த வாரம் உளவு செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது. இதை, அமெரிக்க மற்றும் தென் கொரியா உள்ளிட்ட நாடுகள் கண்டித்து இருந்தன. உளவு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த இந்த ஆண்டு தொடக்க முதலே, வட கொரியா முயன்று வந்தது. பல்வேறு முயற்சிகளுக்குப் பின்னர், தற்போது வெற்றிகரமாக அந்த செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தி இருப்பதாக கூறுகிறது. இந்த தகவல்களை, வட கொரியாவை தவிர வேறு எந்த நாடுகளும் உறுதிப்படுத்தாத நிலையில், புகைப்படங்களையும் வட கொரியா இன்னும் வெளியிடவில்லை.