பாகிஸ்தான், பப்புவா நியூ கினி, ஜிசாங் நாடுகளில் நிலநடுக்கம்
பாகிஸ்தான், பப்புவா நியூ கினி, ஜிசாங் ஆகிய நாடுகளில் சில நிமிட இடைவேளைகளில் மூன்று வெவ்வேறு நிலநடுக்கங்கள் உணரப்பட்டது. பாகிஸ்தானில் இன்று காலை 3:38 மணியளவில் ரிட்டர் அளவில், 4.4 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது. பின்னர் சில நிமிடங்களில், ரிட்டர் அளவில் 6.5 அளவிலான நிலநடுக்கம் பப்புவா நியூ கினி நாட்டின் வடக்கு கடற்கரை பகுதியில் உணரப்பட்டது. பசிபிக் தீவு நாட்டின், கிழக்கு செபிக் மாகாணத்தின் தலைநகரான வெகாக் நகரத்திலிருந்து சிறிது தொலைவில், கடற்கரையிலிருந்து 20 கிலோமீட்டர் (12 மைல்) தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது அதேபோல், ரிக்டர் அளவுகோலில் 5.0 அளவிலான நிலநடுக்கம் 140 கிமீ ஆழத்தில், அதிகாலை 3:45 மணிக்கு ஜிசாங்கைத் தாக்கியது.
பப்புவா நியூ கினி நாட்டில் அடிக்கடி ஏற்படும் நிலநடுக்கம்
தென்கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் படுகை முழுவதும் பரவியிருக்கும், தீவிர டெக்டோனிக் செயல்பாடு உள்ள பகுதியில் அமைந்திருக்கும், பப்புவா நியூ கினி நாட்டில் நிலநடுக்கங்கள் சாதாரணமானவை. குறைந்த அளவு மக்கள் தொகை வாழும் மலைப்பிரதேசங்களில் எப்போதாவது சேதத்தை ஏற்படுத்தினாலும், நிலநடுக்கங்கள் நிலச்சரிவை ஏற்படுத்துகின்றன. இந்தாண்டு ஏப்ரல் மாதம், ரிட்டர் அளவில் 7.0 ஆக பதிவான நிலநடுக்கத்தில் குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டனர். நிலநடுக்கத்தின் மையப்பகுதிக்கு அருகில், அடர்ந்த மலை காடுகளில் அமைந்துள்ள கராவாரி பகுதியில் 180 வீடுகள் சேதம் அடைந்தன. மேலும் கடந்த 2018 ஆம் ஆண்டு ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கத்தில், அந்நாட்டில் கிட்டத்தட்ட 150 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.