ஹமாஸிடம் பணய கைதிகள் சிக்கிய ராணுவ வீரர்கள் உட்பட மூவரின் உடல்களை மீட்டது இஸ்ரேல் ராணுவம்
ஹமாஸால் பணய கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்ட இரண்டு ராணுவ வீரர்கள் உட்பட, 3 இஸ்ரேலிகளின் உடல்களை காசாவில் இருந்து, இஸ்ரேல் ராணுவம் மீட்டுள்ளதாக அந்நாடு தெரிவித்துள்ளது. 28 வயதான எலியா டோலிடானோ மற்றும் 19 வயதான ராணுவ வீரர்கள் நிக் பெய்சர் மற்றும் ரான் ஷெர்மன் ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள இஸ்ரேல் ராணுவம், அவர்கள் எவ்வாறு உயிரிழந்தனர் மற்றும் காசாவின் எந்த பகுதியில் இருந்து மீட்கப்பட்டனர் என்ற தகவல்களை வெளியிடவில்லை. அக்டோபர் 7ஆம் தேதி நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் இருந்து, டோலிடானோ ஹமாஸால் கடத்தப்பட்டதாக இஸ்ரேலி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
19,000ஐ கடந்த உயிரிழப்புகள்
அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் அமைப்பால் தூண்டப்பட்ட போரில் தற்போது வரை, 19,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் இஸ்ரேல் தாக்குதலால் கொல்லப்பட்டுள்ளனர். ஹமாஸ் தாக்குகளில் தற்போது வரை 1,200 இஸ்ரேலிகள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 240 நபர்கள் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட போர் நிறுத்தத்தின் போது, பல்வேறு நாடுகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பணய கைதிகள், பாலஸ்தீன சிறைக் கைதிகளின் விடுதலைக்கு மாற்றாக விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், தற்போது வரை 130 நபர்கள் காசாவில் பணய கைதிகளாக இருப்பதாக நம்பப்படுகிறது. எனினும் அதில் பலர் இறந்திருக்கலாம் என இஸ்ரேல் ராணுவம் சந்தேகிக்கின்றது.