ஸ்பெயின் அதிபருக்கு கோவிட் தொற்று; ஜி 20 மாநாட்டில் கலந்துகொள்ள மாட்டார் என அறிவிப்பு
ஸ்பெயினின் ஜனாதிபதி பெட்ரோ சான்செஸ், ஜி20 மாநாட்டில் கலந்துகொள்வதற்கு முன்னர், வழிகாட்டுதல்படி, COVID-19 பரிசோதனைக்கு தன்னை உட்படுத்தி கொண்டார். அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகவே, அவரால் புதுதில்லியில் நடைபெறும் ஜி20 உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள முடியாது என்றும் அறிவித்துள்ளார். இருப்பினும், அவர் சார்பாக, G20 உச்சிமாநாட்டில் ஸ்பெயினின் முதல் துணைத் தலைவர் நாடியா கால்வினோ சான்டாமரியா மற்றும் வெளியுறவு மந்திரி ஜோஸ் மானுவல் அல்பரேஸ் ஆகியோர் கலந்துகொள்வார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் விளாடிமிர் புடின் மற்றும் சீனாவின் ஜி ஜின்பிங் ஆகியோரை தொடர்ந்து இந்த ஜி20 உச்சிமாநாட்டில் இருந்து விலகிய மூன்றாவது உலகத் தலைவராக ஸ்பெயின் ஜனாதிபதி சான்செஸ் இணைந்துள்ளார்.
இந்தியாவிற்கு புறப்பட்ட அமெரிக்கா ஜனாதிபதி
ஜி20 மாநாடு நாளை தொடங்குவதால், பெரும்பாலான தலைவர்கள் இன்றே டெல்லியை வந்தடைகிறார்கள். இதில் முக்கியமாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இன்று மாலை டெல்லி வருகிறார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியானதும், அவர் இன்று அதிகாலை இந்தியாவிற்கு புறப்பட்டார். புறப்படுவதற்கு முன்னர், தனது அதிகாரபூர்வ எக்ஸ் தளத்தில், "நான் G20-க்கு செல்கிறேன் - சர்வதேச பொருளாதார ஒத்துழைப்புக்கான முதன்மை மன்றம் - அமெரிக்கர்களின் முன்னுரிமைகளில் முன்னேற்றம், வளரும் நாடுகளுக்கு வழங்குதல் மற்றும் G20க்கான நமது உறுதிப்பாட்டை வழங்கக்கூடிய ஒரு மன்றமாக காட்டுவதில் கவனம் செலுத்துகிறது. நாம் ஈடுபடும் ஒவ்வொரு முறையும், நாம் சிறப்பாக மாறுகிறோம்" என ட்வீட் செய்தது குறிப்பிடத்தக்கது.