
சர்வதேச போதைப் பொருள் வழக்கில் இந்தியா-அமெரிக்க ஒத்துழைப்பு உலகிற்கே முன்னுதாரணம்; எஃப்ஏடிஎஃப் பாராட்டு
செய்தி முன்னோட்டம்
சர்வதேச அளவில் பணமோசடி தடுப்பு மற்றும் பயங்கரவாத நிதி திரட்டலுக்கு எதிராகச் செயல்படும் அமைப்பான எஃப்ஏடிஎஃப் (FATF), இந்தியாவின் அமலாக்கத்துறை (ED) மற்றும் அமெரிக்க அமைப்புகள் இணைந்து நடத்திய கூட்டு விசாரணையை, சர்வதேச ஒத்துழைப்புக்கு ஒரு சிறந்த உதாரணமாகப் பாராட்டியுள்ளது. பணமோசடிக்கு எதிரான சர்வதேச ஒத்துழைப்பு என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள புதிய கையேட்டில் இந்த வழக்கு இடம்பெற்றுள்ளது. இந்தியா மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்திய விசாரணையில், பன்மீத் சிங் மற்றும் பர்வீந்தர் சிங் என்ற இரு சகோதரர்கள் டார்க்நெட் மூலம் நடத்தி வந்த மிகப்பெரிய உலகளாவிய போதைப்பொருள் கடத்தல் நெட்வொர்க் கண்டறியப்பட்டது. இந்தச் சிண்டிகேட் மூலம் சுமார் ₹1,250 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
கிரிப்டோகரன்சி
சட்டவிரோத பணம் கிரிப்டோகரன்சி மூலம் பரிமாற்றம்
இந்தச் சகோதரர்கள், தங்கள் சட்டவிரோத வருமானத்தை கிரிப்டோகரன்சிகள் மூலம் பணமோசடி செய்துள்ளனர். எஃப்ஏடிஎஃப் இந்த வழக்கை ஒரு சிறந்த உதாரணமாகக் கருதியதற்குக் காரணம், இரு நாடுகளுக்கும் இடையிலான விரைவான மற்றும் முறைசாரா தகவல் பரிமாற்றம்தான். வழக்கமான சட்ட உதவிகளைக் காட்டிலும், நிகழ்நேர ஒருங்கிணைப்பு மற்றும் கூட்டுப் பகுப்பாய்வு மூலம் விரைவாகச் செயல்பட்டதே இந்த வெற்றிக்குக் காரணம். இந்திய அரசு பணமோசடி தடுப்புச் சட்டம் மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் ஆகியவற்றில் திருத்தங்கள் செய்து, சர்வதேச ஒத்துழைப்பை எளிதாக்கியுள்ளது. இந்த சட்ட பலமும், அமலாக்கத்துறையின் செயல்திறனும் இணைந்து, சிங் சகோதரர்களின் நெட்வொர்க்கை உடைக்க உதவியது.