
துருக்கியில் இறந்த பிரிட்டிஷ் சுற்றுலா பயணியின் இதயம் எங்கே? பிரேத பரிசோதனையில் பகீர் தகவல்
செய்தி முன்னோட்டம்
28 வயதான பிரிட்டிஷ் பெண் பெத் மார்ட்டின், துருக்கியில் குடும்ப விடுமுறையின் போது மர்மமான சூழ்நிலையில் பரிதாபமாக இறந்தார்.
இது சர்வதேச அளவில் கவனம் பெற்ற நிலையில், பிரேத பரிசோதனையில் அவரது இதயம் காணவில்லை என்பது தெரியவந்ததை அடுத்து சர்ச்சை வெடித்துள்ளது.
பிரிட்டனின் போர்ட்ஸ்மவுத்தைச் சேர்ந்த இரண்டு குழந்தைகளின் தாயான பெத் மார்ட்டின், ஏப்ரல் 27 அன்று இஸ்தான்புல்லுக்கு விமானத்தில் செல்லும்போது கடுமையாக நோய்வாய்ப்பட்டார்.
ஆரம்பத்தில் உணவு கெட்டுபோனதன் காரணமாக இது நடந்திருக்கலாம் எனக் கூறிய நிலையில், விமானம் தரையிறங்கிய சிறிது நேரத்திலேயே மயக்கமடைந்து மர்மாரா பல்கலைக்கழக பெண்டிக் கல்வி மற்றும் ஆராய்ச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அடுத்த நாள், ஏப்ரல் 28 அன்று அவர் இறந்தார்.
துருக்கி
சந்தேகத்தைக் கிளப்பிய துருக்கியின் அறிக்கை
துருக்கிய சுகாதார அமைச்சகம் அவரது மரணத்திற்கு பல உறுப்புகள் செயலிழப்பால் ஏற்பட்ட மாரடைப்பு காரணமாகக் கூறியது, ஆனால் அதற்கான உறுதியான விளக்கத்தை வழங்கத் தவறிவிட்டது.
அவரது கணவர் லூக் மார்ட்டின், துருக்கிய அதிகாரிகளால் தவறாக நடத்தப்பட்டதாகக் குற்றம் சாட்டினார்.
இதில் அவரது மனைவிக்கு விஷம் கொடுத்ததாகவும், மருத்துவமனை வாகன நிறுத்துமிடத்தில் ஆயுதமேந்திய அதிகாரிகளால் விசாரணையை எதிர்கொண்டதாகவும் பொய்யாகக் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த களேபரங்களுக்குப் பிறகு, அவரது உடல் திருப்பி அனுப்பப்பட்ட நிலையில், பிரிட்டிஷ் பிரேத பரிசோதனை அதிகாரிகள் அவரது இதயம் காணாமல் போனதாக குடும்பத்தினரிடம் தெரிவித்தனர், இது மேலும் சீற்றத்தைத் தூண்டியது.
விசாரணை
மருத்துவ அலட்சியம் குறித்து விசாரணை
துருக்கிய அதிகாரிகள் எந்த அறுவை சிகிச்சை முறைகளையும் செய்ய மறுத்து, உறுப்பு நீக்க கருத்தை நிராகரித்துள்ளனர். பெத்துக்கு ஒவ்வாமை இருந்த போதிலும் பென்சிலின் வழங்கப்பட்டதற்கான சாத்தியக்கூறுகள் உட்பட மருத்துவ அலட்சியத்தை குடும்பத்தினர் சந்தேகிக்கின்றனர்.
மேலும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படாமல் விடப்பட்டதாகக் கூறுகின்றனர்.
விசாரணை நடந்து வருகிறது, மேலும் குடும்பத்தை ஆதரிப்பதற்காக GoFundMe பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது, இதன் நோக்கம் £250,000 திரட்டுவதாகும்.
சுற்றுலா பயணிகள் செல்வதற்கு விரும்பும் நாடுகளில் ஒன்றாக திகழும் துருக்கியில் நடந்துள்ள இந்த சம்பவம், அங்கு வெளிநாட்டினரின் பாதுகாப்பு குறித்து அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.