உறைபனியில் உறைந்த ஜெர்மனி தலைநகர்! 45,000 வீடுகள் இருளில் மூழ்கின; பயங்கரவாதச் சதியா?
செய்தி முன்னோட்டம்
ஜெர்மனி தலைநகர் பெர்லினில் கடந்த இரண்டு நாட்களாக நீடித்த கடுமையான மின்வெட்டு, அந்நாட்டின் பாதுகாப்பு குறித்த பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 45,000 வீடுகள் மற்றும் ஆயிரக்கணக்கான வணிக நிறுவனங்கள் மின்சாரமின்றி தவித்த நிலையில், இந்தச் சம்பவத்திற்குப் பின்னால் பயங்கரவாதச் சதி இருப்பதாகச் சந்தேகிக்கும் ஜெர்மனி அரசு, தற்போது தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளது. பெர்லினின் முக்கிய மின்சாரக் கட்டமைப்பில் உள்ள உயர்மின்னழுத்தக் கம்பிகள் மீது நடத்தப்பட்ட திட்டமிட்ட தீவைப்புத் தாக்குதல் காரணமாக இந்த மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, பெர்லினில் தற்போது கடும் உறைபனி நிலவி வரும் சூழலில், மின்சாரம் இல்லாததால் வீடுகளில் வெப்பமூட்டும் வசதிகள் செயலிழந்தன. இதனால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
பயங்கரவாதம்
பயங்கரவாதக் குழு உரிமைக்கோரல்
இந்தத் தாக்குதலுக்கு வல்கன்குரூப் என்ற இடதுசாரி தீவிரவாதக் குழு பொறுப்பேற்றுள்ளது. மின்சாரக் கட்டமைப்பைச் சேதப்படுத்துவதன் மூலம் பொதுச் சேவைகளை முடக்கத் திட்டமிட்டதாக அக்குழு தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, ஜெர்மனியின் ஃபெடரல் வழக்கறிஞர்கள், இது ஒரு பயங்கரவாதச் செயல் மற்றும் நாசவேலை என்ற அடிப்படையில் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். கடும் குளிரில் தவிக்கும் மக்களுக்கு உதவ ஜெர்மனி ராணுவம் களம் இறங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் தங்குவதற்காக ஹோட்டல்கள் மற்றும் பள்ளிகளில் தற்காலிக வெப்பமூட்டும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பேருந்துகள் தற்காலிகமாக மக்கள் சூடாகத் தங்குவதற்கான இடங்களாக மாற்றப்பட்டன. பாதிக்கப்பட்ட மக்களின் ஹோட்டல் கட்டணத்தைத் தாங்களே ஏற்பதாக பெர்லின் மாநகராட்சி அறிவித்துள்ளது.