Page Loader
பங்களாதேஷில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களுக்கு எதிராக போராட்டத்தில் இறங்கிய இந்துக்கள்
பங்களாதேஷ் இந்துக்கள் போராட்டம்

பங்களாதேஷில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களுக்கு எதிராக போராட்டத்தில் இறங்கிய இந்துக்கள்

எழுதியவர் Sekar Chinnappan
Aug 11, 2024
12:08 pm

செய்தி முன்னோட்டம்

பங்களாதேஷில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு, சிறுபான்மை சமூகங்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு எதிராக அந்நாட்டில் உள்ள ஆயிரக்கணக்கான இந்துக்கள் நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சனிக்கிழமையன்று (ஆகஸ்ட் 10) நடந்த இந்த போராட்டம், இந்து சமூகத்தின் மிகப்பெரிய ஆர்ப்பாட்டமாக அமைந்தது. முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அரசாங்கம் அகற்றப்பட்ட பின்னர் பல வன்முறை சம்பவங்களைத் தொடர்ந்து அவர்கள் நீதி மற்றும் பாதுகாப்பைக் கோரி இந்த போராட்டத்தை நடத்தினர். குறிப்பாக, டாக்கா, சட்டோகிராம், பாரிசல், தங்கைல் மற்றும் குறிகிராம் உள்ளிட்ட நகரங்களில் போராட்டக்காரர்கள் அதிக அளவில் கூடினர்.

ட்விட்டர் அஞ்சல்

இந்துக்கள் போராட்டம்

அரசு கண்டனம்

சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களுக்கு இடைக்கால அரசு கண்டனம்

ஷேக் ஹசீனா அரசாங்கத்தின் வீழ்ச்சியைத் தொடர்ந்து, பங்களாதேஷில் குறைந்தது இரண்டு இந்து அமைப்புகள் மற்றும் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 205 தாக்குதல்களை எதிர்கொண்டதாக கூறப்படுகிறது. இந்த வன்முறையின் விளைவாக, ஆயிரக்கணக்கான பங்களாதேஷ் இந்துக்கள் அண்டை நாடான இந்தியாவுக்கு தப்பிச் செல்ல முயன்றனர். இந்நிலையில், பங்களாதேஷின் இடைக்கால அரசாங்கத்தின் தலைவரான முஹம்மது யூனுஸ், இந்தத் தாக்குதல்கள் கொடூரமானது என்று கண்டனம் தெரிவித்தார். "அவர்கள் இந்த நாட்டு மக்கள் இல்லையா? நாட்டைக் காப்பாற்ற முடிந்த உங்களால் சில குடும்பங்களைக் காப்பாற்ற முடியவில்லையா?" என்று அவர் போராட்டக்காரர்களை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அனைத்து இந்து, கிறிஸ்தவ மற்றும் பௌத்த குடும்பங்களையும் பாதிப்பிலிருந்து பாதுகாக்குமாறு மாணவர்களை அவர் கேட்டுக் கொண்டார்.